சத்தியமங்கலம், பிப்.28: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவை ஒட்டி சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நேற்று நடைபெற்றது. சத்தியமங்கலம் எஸ்ஆர்டி கார்னரில் தொடங்கிய ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, அதிமுக, காங்., விசிக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் எஸ்ஆர்டி கார்னரில் இருந்து ரங்கசமுத்திரம், எஸ்பிஎஸ் கார்னர் வழியாக புதிய பஸ் நிலையத்தை சென்றடைந்தது.
இதை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த நல்லகண்ணுவின் திருவருவப்படத்திற்கு அனைத்து கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர், தாளவாடி, கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
