புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பிதான்நகரில் நேற்று முன்தினம் நடந்த சந்தாலி பழங்குடியின சமூகத்தின் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்பட்டிருந்தார். பின்னர், கடைசி நேரத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக நிகழ்ச்சி கோசாய்பூரில் உள்ள பாக்டோக்ரா விமான நிலையத்துக்கு அருகே நிகழ்ச்சி மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இதில் கலந்து கொள்ள பாக்டோக்ரா விமான நிலையம் சென்ற குடியரசு தலைவர் முர்முவை சிலிகுரி மாவட்ட மேயர் கவுதம் தேவ் மட்டுமே வரவேற்க சென்றிருந்தார்.
முதல்வர் மம்தா பானர்ஜியோ அல்லது பிற அமைச்சர்களோ செல்லவில்லை. கோசியாபூரில் நடந்த நிகழ்ச்சியில் குறைந்த அளவு கூட்டத்தினரே கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய முர்மு, மாநில முதல்வர் மம்தா பானர்ஜியோ, அமைச்சர்களோ தன்னை வரவேற்க வராதது பற்றி அதிருப்தி தெரிவித்திருந்தார். இதுகுறித்து முர்மு பேசுகையில், “நானும் மேற்குவங்கத்தின் மகள்தான். முதல்வர் மம்தா பானர்ஜி என் தங்கை போன்றவர். அவர் ஏதேனும் அதிருப்தியில் உள்ளாரா என்று தெரியவில்லை. என்னை வரவேற்க அவரோ, அமைச்சர்களோ வரவில்லை.
இந்த நிகழ்ச்சியும் பிதான்நகரில் நடந்திருந்தால் இன்னும் அதிகம் பேர் வந்திருப்பார்கள். ஒருவேளை பழங்குடியினர் நலன் மீது மாநில அரசுக்கு அக்கறை இல்லையோ என நான் நினைக்கிறேன்” என வௌிப்படையாக ஆதங்கத்தை தெரிவித்திருந்தார். இதனால் குடியரசு தலைவர் முர்முவை மம்தா பானர்ஜி அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் மேற்குவங்க தலைமை செயலாளர் நந்தினி சக்ரவர்த்தியிடம் விளக்கம் கேட்டு ஒன்றிய உள்துறை நோட்டீஸ் அனுப்பியது.
அதில், “ குடியரசு தலைவரை வரவேற்க மாநில முதல்வரோ, அமைச்சர்களோ ஏன் செல்லவில்லை? குடியரசு தலைவருக்காக அமைக்கப்பட்ட கழிவறையில் போதிய தண்ணீர் வசதி ஏன் செய்யப்படவில்லை? குடியரசு தலைவரை அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழிகளில் அதிகளவிஜல் குப்பைகள் ஏன் குவிந்திருந்தன? அதை ஏன் சரி செய்யவில்லை?
இந்த விவகாரத்தில் டார்ஜிலிங் மாவட்ட ஆட்சியர், சிலிகுரி காவல் ஆணையர் மற்றும் மாவட்ட கூடுதல் ஆணையர் அனைவரும் பொறுப்பானவர்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” இந்த விதிமீறல்கள் குறித்து நேற்று மாலைக்குள் பதிலளிக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இதுதொடர்பாக மேற்குவங்க தலைமை செயலாளர் எந்த பதிலும் அளித்ததாக தகவல்கள் வௌியாகவில்லை.
* நாட்டையும், அரசியலமைப்பையும் மம்தா அவமதித்து விட்டார்: பிரதமர் கண்டனம்
குடியரசுத் தலைவர் முர்மு அவமதிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “சர்வதேச மகளிர் தினத்தை நாடு கொண்டாடும் நிலையில், இந்தியாவின் மாண்புமிகு குடியரசு தரைவர் திரவுபதி முர்முவை அவமதித்து விட்டது மிக கவலையளிக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடானது. குடியரசு தலைவர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது.
பழங்குடியினத்தை சேர்ந்த குடியரசு தலைவர் முர்முவையும், பழங்குடியினத்தையும் கவுரவிப்பதற்கு பதிலாக, முர்முவையும், பழங்குடியினத்தையும் மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசு அவமதித்து விட்டது. இது குடியரசு தலைவருக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மகத்தான மரபுகளுக்கும், அரசியலமைப்புக்கும் மிகப்பெரிய அவமானம். பழங்குடியினத்தை சேர்ந்த குடியரசு தலைவரை அவமதித்த திரிணாமுல் காங்கிரசை நாடும், நாட்டு மக்களும் மன்னிக்க மாட்டார்கள்” என கூறினார்.
* குடியரசு தலைவரை பிரதமர் தான் அவமதித்தார்: மம்தா பதிலடி
குடியரசு தலைவர் அவமதிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி தன் எக்ஸ் பதிவில், 2024ம் ஆண்டு புதுடெல்லி இல்லத்தில் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், குடியரசு தலைவர் நிற்கும்போது பிரதமர் மோடி நாற்காலியில் அமர்ந்து கொண்டுள்ளார். இதை சுட்டிக்காட்டி மம்தா பானர்ஜி, “நாட்டின் உயரிய குடியரசு தலைவர் பதவியை நாங்கள் ஒருபோதும் அவமதிக்க மாட்டோம்.
அந்த கலாச்சாரத்தை பாஜதான் செய்கிறது” என சாடி உள்ளார். மேலும், கொல்கத்தாவில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “ குடியரசு தலைவரின் நிகழ்ச்சி பற்றி மாநில அரசுக்கு எந்த தகவலுமே தெரியாது. அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மாநில நிர்வாகத்தின் எந்த விதிமீறல்களும் இல்லை. அவரை நாங்கள் அவமதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் சென்ற மகளிர் கழிவறையில் தண்ணீர் இல்லாததற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு என்றார்.
