கேரளாவில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த சாதனையை பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு படைத்துள்ளது. இந்த சாதனை தொடரும் என்றும், பினராயி விஜயனின் 3.0 அரசு அமையும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுதியுடன் கூறி வருகின்றனர். கடந்த 10 வருடங்களில் தாங்கள் கொண்டு வந்த வளர்ச்சித் திட்டங்கள் முழுமை அடையவும், புதிய பல திட்டங்களை கொண்டு வரவும் கேரள மக்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோஷத்துடன் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
இந்நிலையில் அரசு ஊழியர்களின் வாக்குகளை கவருவதற்காக கேரள அரசு சில அதிரடித் திட்டங்களை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கேரளாவில் அரசு அலுவலகங்கள் திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் செயல்படுகின்றன. இதை 5 நாட்களாக குறைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சமீபத்தில் அரசு ஊழியர்களிடையே கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. வேலை நாட்களை குறைப்பதற்கு அனைத்து அரசு ஊழியர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது கேரள அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56ஆக உள்ளது. இதை 60ஆக உயர்த்தவும் திட்டம் உள்ளது. இந்த 2 திட்டங்களும் கேரளாவில் அரசு ஊழியர்களை குஷிப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
