40 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.9,000 அசாம் பாஜ அரசின் தேர்தல் பரிசு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘மாநிலத்தின் ‘அருணோடோய்’ திட்டத்தின்கீழ் சுமார் 40 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.9,000 நிதியுதவி வழங்கப்பட உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில், ஒரே நாளில் மொத்தம் ரூ.3,600 கோடி பெண்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்படும். அசாமில் வறுமை ஒழிப்பு மற்றும் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,250 வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த 4 மாதமாக இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு நிதி தரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.5000 மற்றும் அசாம் புத்தாண்டு (பிஹு) கொண்டாட்டத்திற்கான கூடுதல் நிதி ரூ.4000 ஆகியவை சேர்த்து இந்த 9,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

அசாம் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பெண்களின் முன்னேற்றமே மாநில வளர்ச்சியின் மையப்புள்ளி. மாநிலத்தில் இதுவரை 59 லட்சம் குடிநீர் இணைப்புகள், 51 லட்சம் இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பெண்கள் தொழில்முனைவோராக மாற்றப்பட்டுள்ளனர். தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்’’ என்று மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: