தென்காசி,மார்ச் 9: தென்காசியில் கஞ்சா வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இது குறித்து தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 11 கிலோ கஞ்சா, லாரி, நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியை சேர்ந்த பரமசிவன் மகன் நயினார் விக்னேஷ் (32), ஆலங்குளம் நெட்டூர் பகுதியை சேர்ந்த முப்புடாதி மகன் இசக்கிகுமார் (31), இசக்கிமுத்து மகன் பேச்சிமுத்து (30) ஆகியோர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில் நயினார்விக்னேஷ் உள்பட 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
