நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு: ஈரான் போர், சமையல் காஸ் விலை உயர்வு குறித்து பிரச்னை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டம்

 

புதுடெல்லி: சுமார் ஓரு மாத கால விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகிறது. அப்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் மீது இன்று விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடக்கும். ஈரான் போரில் இந்தியாவின் நிலை என்ன? மற்றும் சமையல் காஸ் விலை உயர்வு குறித்து பிரச்னை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி துவங்கியது. இதில், கடந்த பிப். 1ம்தேதி ஒன்றிய பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசுவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை.

இதனால் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவையில் பல நாள்களாக அலுவல்கள் பாதிக்கப்பட்டன. சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, ஒரு தலைபட்சமாக ஆளும் பாஜவுக்கு தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீது இந்தியா கூட்டணி கட்சிகள் பதவி நீக்கத் தீர்மானம் தாக்கல் செய்தனர். இந்த தீர்மானத்தில் 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர்.

இந்தத் தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கப்படும் வரை சபாநாயகர் ஓம் பிர்லா அவைப் பணிகளில் இருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளார்.இதனால் அவை நடவடிக்கைகளில் அவர் பங்கேற்கவில்லை. இதற்கிடையே பிப்ரவரி 13ம் தேதி நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு நிறைவடைந்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று துவங்குகிறது. முதல் நாளான இன்று சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிரான பதவி நீக்கத்தீர்மானம் மீது மக்களவையில் விவாதம் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மக்களவை கூடியதும், மறைந்த ஷில்லாங் தொகுதி உறுப்பினர் ரிக்கி சிங்கோன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், கேள்வி நேரம் இடம் பெறாது.

இதைத்தொடர்ந்து, ஈரான் போர் நிலவரம் குறித்து வௌியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்கிறார். பின்னர், சபாநாயகர் ஓம்பிர்லா மீதான பதவி நீக்கத் தீர்மானத்தை காங்கிரஸ் எம்.பி.க்களான முகமது ஜாவத், கே.சுரேஷ் மற்றும் மல்லு ரவி ஆகியோர் முன்மொழிவார்கள்.

இதையடுத்து விவாதம் நடைபெறும். இந்தத் தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடக்கும் போது அனைத்து உறுப்பினர்களும் அவையில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் எம்.பி.க்களுக்கு ‘கொறடா’ உத்தரவை பிறப்பித்துள்ளன. அதில் மார்ச் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை உறுப்பினர்கள் அவையில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சபாநாயகர் ஓம்பிர்லாவுக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஓம் பிர்லா அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்துச் செல்வதாகப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விவாதத்தின் போது தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கவும், முதல் சுற்றில் வாக்களிக்கவும் சபாநாயகர்
ஓம் பிர்லாவுக்கு உரிமை உள்ளது. மக்களவையில் ஆளும் பாஜ கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது. இதனால், ஓம்பிர்லாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது.

தீர்மானத்தில் கையெழுத்திடாத திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதை ஆதரித்து வாக்களிக்கப்போவதாக தற்போது அறிவித்துள்ள போதும் அந்த தீர்மானம் தோல்வி அடையும். ஆனால், சபாநாயகர் நடுநிலையோடு செயல்படாமல் ஒருதலைப்பட்சமாக நடப்பதை எடுத்துக்காட்ட நல்ல வாய்ப்பாக அமையும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு 1954, 1966 மற்றும் 1987 ஆகிய ஆண்டுகளில் சபாநாயகர்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வில், சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழலும் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல்கள், அதனால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் விலை உயர்வு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வெளியுறவுக் கொள்கையில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பக் கூடும்.

இது தவிர மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறித்து பிரச்னை எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்குப் பதிலடியாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மேற்கு வங்கத்திற்குச் சென்றபோது அவர் அவமரியாதை செய்யப்பட்டது குறித்துப் பேச பாஜக திட்டமிட்டுள்ளது.

Related Stories: