பெண்களை இழிவாக சித்தரித்த விவகாரத்தில் அரியானா ‘பாப்’ பாடகர் மீது வழக்கு: மகளிர் ஆணைய நோட்டீசால் திருப்பம்

பஞ்சகுலா: இசை பாடலில் பெண்களை இழிவாக சித்தரித்த விவகாரத்தில் ராப் பாடகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘அரியான்வி’ மொழியில் வெளியான இசை ஆல்பம் ஒன்றில், பள்ளிச் சீருடை அணிந்த சிறுமிகள் புத்தகப் பைகளை வீசி எறிந்துவிட்டு கல்வியைப் புறக்கணிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. மேலும், பாடசாலையை ‘பாட்ஷாலா’ என மாற்றி கல்வி நிலையத்தின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் வரிகள் அமைக்கப்பட்டிருந்ததாக சமூக ஆர்வலர்கள் மற்றும் மகளிர் ஆணையம் சார்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இது தொடர்பாக அரியானா மாநிலம் பஞ்சகுலா போலீசார் கடந்த 6ம் தேதி பெண்கள் ஆபாச சித்தரிப்பு தடைச் சட்டத்தின் கீழ் ராப் பாடகர் பாட்ஷா மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, தலைமறைவாக உள்ள பாட்ஷா வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சம்பந்தப்பட்ட பாடல் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அரியானா மாநில மகளிர் ஆணையம் வரும் 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பாட்ஷாவிற்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், நேற்று பாட்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கோரியுள்ளார்.

அதில், ‘நான் அரியானாவைச் சேர்ந்தவன் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். எந்தவொரு பெண்ணுக்கோ அல்லது குழந்தைக்கோ எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்க நான் விரும்பியதில்லை. என்னை அரியானாவின் மகன் என்று கருதி நீங்கள் மன்னிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: