சோளக்காட்டில் ‘அபின்’ செடி வளர்த்த பாஜக மாநில நிர்வாகி கைது: சட்டீஸ்கர் மாஜி முதல்வர் கண்டனம்

துர்க்: பாஜக விவசாய அணி மாநில நிர்வாகியின் தோட்டத்தில் சட்டவிரோத அபின் செடிகள் வளர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள சமோடா கிராமத்தில், சிவநாத் நதிக்கு அருகே அமைந்துள்ள விவசாய நிலத்தில் சட்டவிரோத பயிர்கள் வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அந்த நிலத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த நிலத்தில், சோளம் மற்றும் ஜோவர் பயிர்களுக்கு நடுவே மறைமுகமாக ‘அபின்’ செடிகள் பயிரிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாஜக கிசான் மோர்ச்சாவின் அரிசி ஆலை பதப்படுத்தும் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளராகப் பதவி வகித்து வந்த விநாயக் தாம்ரகர் என்பவருக்குச் சொந்தமான நிலத்திலேயே இந்த சட்டவிரோத சாகுபடி நடந்துள்ளது. அதிகாரிகள் நடத்திய ஆய்வில், சுமார் 1.5 முதல் 2 ஏக்கர் பரப்பளவில் 50,000க்கும் மேற்பட்ட அபின் செடிகள் ரகசியமாக வளர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. வெளியாட்கள் யாருக்கும் சந்தேகம் வராத வகையில், உயரமான சோளக் காடுகளுக்கு நடுவே இந்த செடிகள் வளர்க்கப்பட்டிருந்தது.

அதையடுத்து விநாயக் தாம்ரகர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து விநாயக் தாம்ரகர் கூறுகையில், ‘என் மீதான புகார்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. சர்ச்சைக்குரிய அந்த நிலத்தை நான் மற்றவர்களுக்கு குத்தகைக்கு விட்டுள்ளேன்’ என்று தெரிவித்தார். இருப்பினும், இந்த விவகாரம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி, சட்டீஸ்கர் மாநில பாஜக தலைவர் கிரண் சிங் தியோ, விநாயக் தாம்ரகரை கட்சியிலிருந்து உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் குறித்து முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகெல் நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் கூறுகையில், ‘அரசு நிர்வாகத்திற்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய அளவில் சட்டவிரோத போதைப்பொருள் சாகுபடி நடைபெற வாய்ப்பில்லை’ என்றார்.

Related Stories: