கோவை: கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் அண்ணன் தம்பி உள்பட 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து 126 நாட்களில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள் அரிவாளால் மாணவியின் காதலனை தலையில் வெட்டினர்.
அதன்பின், 3 பேரும் அந்த கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக கத்தி முனையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடினர். இத்தகவலறிந்த பீளமேடு போலீசார் சம்பவயிடம் வந்து காதலன் மற்றும் மாணவியை மீட்டு 2 பேரையும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நவம்பர் 3ம் தேதி (திங்கட்கிழமை) இரவு துடியலூர் அருகே வெள்ளகிணறு பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரையும் போலீசார் சுட்டுப் பிடித்தனர். அவர்கள் சிவகங்கையை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21), மதுரையை சேர்ந்த குணா என்கிற தவசி (20) என விசாரணையில் தெரியவந்தது.
இவர்களில், சதீஷ் மற்றும் காளீஸ்வரன் அண்ணன்-தம்பி என்பதும், குணா அவர்களின் தூரத்து உறவினர் என்பதும் தெரியவந்தது. இதற்கிடையே மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில், கருப்பசாமி, காளீஸ்வரன், குணா ஆகியோருக்கு எதிராக கோவை மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சிந்து முன்னிலையில் டிசம்பர் 2ம் தேதி முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையானது கூடுதல் மகிளா கோர்ட்டில் இருந்து மகிளா கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி 23ம் தேதி அனைத்து சாட்சி விசாரணையும் நிறைவடைந்தது.
இதையடுத்து இவ்வழக்கில் கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜ் நேற்று தீர்ப்பு கூறினார். அதற்காக 3 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிபதி சுந்தரராஜ் 3 வாலிபர்களையும் குற்றவாளிகள் என அறிவித்தும் 70 (1) சட்டப்பிரிவின் படி (கூட்டு பாலியல் பலாத்காரம்) வாழ்நாள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். 4 மாதங்களில் அதாவது 126 நாட்களில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

