×

லாக்கப் சாவுகளுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எல்.முருகன், திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று சென்னைவிமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மதுரை மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே இன்று காவல்துறை செயல்படுகிறதா என்பது, மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்து கொண்டு இருக்கிறது. நாங்குநேரியில் வழியில் சாதாரணமாக நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது 9 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி, அப்பாவி பட்டியலின பொதுமக்கள் இருவரை கொலை செய்திருக்கின்றனர். அதேபோல், ராமநாதபுரத்திலும் நடந்திருக்கிறது.

இந்த நிலையில், சிவகங்கை லாக்கப் டெத் நடந்திருக்கிறது. இன்று மதுரையிலும், அதை போல் லாக்கப் டெத் நடந்திருக்கிறது. அதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  இவைகளையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால், தென் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினரை மேற்கு மண்டலத்திலோ அல்லது வடக்கு, சென்னை மண்டலத்திலோ பணியில் அமர்த்த வேண்டும். அதைப்போல் மேற்கு மண்டலங்களை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை, தென் மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கலைஞர் உத்தரவு போட்டிருந்தார். அந்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும்.

* விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று மாலை மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி; மதுரை மாவட்டத்தில் சாதாரண அடிதடி என்று ஒரு இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். போலீசார் கூறியதன் பேரில் மகனை காவல்நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். உங்கள் மகன் வீட்டுக்கு வந்து விடுவான் என்று கூறி அனுப்பி உள்ளனர். ஆனால், மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றி விட்டனர்.

மதுரை மருத்துவமனையில் போய் பார்த்தபோது, எனது உடம்பிலிருந்து ரத்தத்தை எடுத்தனர். ஜாதியை சொல்லி அடித்தார்கள் என்று அந்த இளைஞர் தந்தையிடம் கூறியி கதறி அழுதார். காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இளைஞர், மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது ஏன், உயிரிழந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் காவல்துறையினர் உரிய விளக்கம் அளிக்கவில்லை. எனவே தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உயிர் இழப்புக்கு காவல்துறை காரணமாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி சம்பவத்தில் ஜாதி பார்த்து தான் தாக்குதல்கள் நடக்கிறது என்று மக்கள் கூறுகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.

Tags : L. Murugan ,Thirumavalavan ,Chennai ,Union Minister of State ,Chennai airport ,Madurai ,Tamil Nadu ,Nanguneri… ,
× RELATED மானாமதுரையில் விசாரணை கைதி மரண வழக்கை...