சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே குறுக்குரோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் குமார உடைப்பு பாலம், 25 கண்மாய் பாலம் உள்ளது. பழமையான இந்த பாலங்களின் கீழே உபரி நீரை வெளியேற்றும் விதமாக வடிகாலுக்கான ஷட்டர்களும் அமைந்துள்ளது.
இந்த பாலத்தின் வழியாக சென்னை, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் போக்குவரத்து மிகுந்த இந்த பாலத்தின் வழியாக 100க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் குறுகலான இந்த பாலத்தின் வழியாக பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலோடு வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால் பல்வேறு விபத்துகளும் நடந்துள்ளது.பலமுறை கோரிக்கை வைத்தும், இந்த குறுகலான 2 பாலங்கள் மாற்றி அமைக்கப்படாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பருவமழையின்போது கனஅடி உபரி நீர் 25 கண்மாய், குமார உடைப்பு உள்ளிட்ட பாலங்களின் வழியாக வெளியேற்றப்பட்டு வெள்ளாற்றுக்கு சென்று வடிகால் ஆகும்.
தற்போது 25 கண்மாய் பாலம் அருகே அதிகளவு புதர் மண்டியுள்ளதால் உபரி நீர் வடிகால் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறுகலான குமார உடைப்பு மற்றும் 25 கண்மாய் பாலம் அருகில் புதிய பாலம் கட்டி, வடிகால் பகுதிகளை தூர்வார வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
