கோட்டைப்பட்டினத்தில் மின்மாற்றி கம்பத்தில் பழுது பார்த்த மின்ஊழியர் உயிரிழப்பு

*உறவினர்கள் சாலை மறியல்

அறந்தாங்கி : கோட்டைப்பட்டினத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தற்காலிக மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி அடுத்த கோட்டைப்பட்டினம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (48), இவர் அதே பகுதியில் தற்காலிக மின்சாரவாரிய ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் இருந்து மின்விநியோகம் செய்யப்பட்டும், கொடிகுளம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குமரேசன் கோட்டைப்பட்டினம் பகுதியில் உளள் டிரான்ஸ்பார்மரில் ஏறி பாராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் குமரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தகவலறிந்த அவரது உறவினர்கள் மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவித்துவிட்டு மின்சாரம் விநியோகம் செய்தது தவறு எனக்கூறி சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்துபோன குமரேசனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அவ்வழியாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: