சோழவந்தானில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பரிகாரம் செய்து வழிபாடு

 

சோழவந்தான்: சோழவந்தானில் சுயம்பு சனீஸ்வரன் கோயிலில் சனி பெயர்ச்சியையொட்டி இன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் இடம்பெயர்ந்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பரிகாரம் செய்து சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தானில் வைகைக் கரையோரம் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. திருநள்ளாறு, குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில்களைப் போல, பிரசித்தி பெற்ற பரிகார ஸ்தலமான இங்கு சனி பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு சனி பெயர்ச்சி விழாவையொட்டி நேற்று மாலை நாகேஸ்வர சிவாச்சாரியார், ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோரால் குரு வந்தனம், விக்னேஸ்வரா பூஜையுடன் முதல் கால யாகசாலை தொடங்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு மேல் பரிகார யாக பூஜைகள் நடைபெற்றன.

இந்த ஆண்டு பரிகாரம் செய்ய வேண்டிய சிம்மம், மீனம், மேஷம், கும்பம், கன்னி ஆகிய ராசிக்காரர்கள், தங்கள் பெயர், ராசி, நட்சத்திரங்களுக்கு பரிகாரம் செய்து வழிபட்டனர். இதேபோல் மற்ற ராசிக்காரர்களும் பொதுவான அபிஷேகம் செய்து தரிசித்தனர். பின் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து 8.24 மணியளவில் (சனி பெயர்ச்சி நேரத்தில்) மூலவருக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து, கும்பம் ராசியிலிருந்து மீனம் ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியானார். பின் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சோழவந்தான் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சரக ஆய்வாளர் ஜெயலெட்சுமி, தக்கார் இளமதி மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Related Stories: