புதுடெல்லி: ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மறைவுக்கு இந்தியா சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28ம் தேதி நடத்திய கூட்டு தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இருதரப்பிலும் 6வது நாளாக போர் நீடிக்கும் நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதில் இரு அமைச்சர்கள் இடையே நடந்த உரையாடல் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, கமேனி மறைவுக்கு இந்திய அரசு சார்பில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேரில் சென்று அந்நாட்டு தூதர் முகமது பதாலியை சந்தித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். மேலும், அங்குள்ள இரங்கல் புத்தகத்தில் இந்திய அரசு சார்பில் அவர் கையெழுத்திட்டார். கமேனி காலமாகி 6 நாட்களுக்கு பிறகு இந்திய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. முன்னதாக கமேனி படுகொலையை இந்தியா கண்டிக்காதது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
