திருமலை: பீகாரை தொடர்ந்து ஆந்திராவிலும் அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவியை சந்திரபாபுநாயுடு ராஜினாமா செய்துவிட்டு மகனை அரியணை ஏற்றிவிட்டு டெல்லி லாபிக்கு செல்ல விரும்புவதாக கூறப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் தெலுங்குதேச கட்சியும் ஆதரவளித்து வருகின்றனர்.
இவர்களில் நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராஜ்யசபா எம்பியாக திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில் ஒன்றிய அரசுக்கு ஆதரவளித்து வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அதிரடி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் பவன்கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே தனது முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்துவிட்டு தனது மகன் நாரா.லோகேஷை முதல்வர் அரியணையில் ஏற்ற விரும்புவதாக கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடுவு டெல்லியில் தனது ஆளுமையை நிலைநிறுத்த விரும்புவதாக ெதரிகிறது. அதாவது அடுத்த ஆண்டு நடக்க உள்ள குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட விரும்புகிறாராம்.
அல்லது துணை பிரதமர் அல்லது ஒன்றிய அரசில் முக்கிய பதவியை பெற விரும்புவதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப சூழ்நிலையை உருவாக்க சந்திரபாபு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கேற்ப தற்போது ஆந்திராவில் தனது மகன் நாரா.லோகேஷை முன்னிலைப்படுத்தி பல பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சொந்த கட்சி விவகாரம், அரசாங்க முடிவுகள் எடுப்பது போன்ற பயிற்சிகளை தனது மகன் லோகேஷூக்கு தந்ைத சந்திரபாபு நாயுடு அளித்து வருவதாக கூறப்படுகிறது.
சந்திரபாபு நாயுடுவின் முடிவை துணைமுதல்வரும், கூட்டணி கட்சியின் தலைவருமான பவன்கல்யாணும் ஏற்றுள்ளதாக தெரிகிறது. எனவே விரைவில் சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மகனை அரியணையில் ஏற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
