×

சமஸ்கிருதத்தை வளர்க்கவே அக்கறை காட்டுகிறது தமிழ் தமிழ்ன்னு சொல்லி மக்களை ஏமாற்றும் ஒன்றிய அரசு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: சமஸ்கிருதத்தை வளர்க்கவே ஒன்றிய அரசு அக்கறை காட்டுகிறது. தமிழ் தமிழ்ன்னு சொல்லி மக்களை ஏமாற்றும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தஞ்சாவூர் கரந்தை தமிழ் சங்கத்தில் கலைஞர் மற்றும் தமிழ் சங்க முன்னாள் தலைவர் ராமநாதன் ஆகியோரது சிலைகள் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைத்து பேசியதாவது: 1937ல் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியை திணிக்கும்போது அதை எதிர்த்து தீர்மானம் போட்டதும் கரந்தை தமிழ் சங்கம்தான்.

இந்தி திணிப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மகளிரை பங்கேற்க வைத்தது கரந்தையை சேர்ந்த அன்னை தர்மாம்பாள். ​அப்போது தொடங்கிய இந்தி திணிப்பு முயற்சி இன்றும் தொடர்கிறது. நேற்றும் (நேற்றுமுன்தினம்) திருச்சி ரயில்வே அலுவலக வாயிலில் இந்தியில் எழுதப்பட்டிருந்தது. அதற்கு முதல் எதிர்ப்பு குரல் எழுப்பியவர் முதல்வர். புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும் உன்னுடைய இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் தமிழ்நாட்டில் எப்போதும் இடம் கிடையாது என்று முதல்வர் கூறி விட்டார். கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மட்டும் ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை ரூ.2,500 கோடி. ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை வெறும் ரூ.147 கோடி. ​தமிழ் தமிழ்ன்னு சொல்லி மக்களை ஏமாற்றும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது.

அந்த ஏமாற்று வேலைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். உண்மையாக தமிழுக்காக உழைப்பவர்கள் யார், போலித்தனமாக நடிப்பவர்கள் யார் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். எனவே அனைவரும் முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அன்னை தமிழை காப்போம், ஆதிக்க மொழித்திணிப்பை என்றும் வீழ்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Union government ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Thanjavur ,
× RELATED குழாயில் கசிவை சரி செய்யும் பணி 5...