- அடித்தள வெளியீட்டு பிரிவு
- முதல் அமைச்சர்
- கே
- ஸ்டாலின்
- சென்னை
- சென்னை பொதுச் செயலகம்
- தொண்டு அமைச்சகம்
- தமிழ்நாடு அரசு
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவின் சார்பில் நான்காம் கட்டமாக புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 500 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: பதிப்பகப் பிரிவின் மூலம் நான்காம் கட்டமாக, மறுபதிப்பே இல்லாமல் இருந்த தொன்மையான அரிய புராணங்கள், திருமுறைகள், பிரபந்தங்கள்,
போற்றிப் பாடல்கள், சைவ, வைணவ ஆய்வு நூல்கள், முக்கிய திருக்கோயில்களின் கல்வெட்டுத் தரவுகளுடன் கூடிய நூல்கள், தலவரலாறு, கிராமப்புற தெய்வங்களின் வரலாறுகளுடன் பாராயணப் பாடல்கள் மற்றும் வழிபாட்டுப் பாடல்கள் என புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 500 ஆன்மிக நூல்களை முதல்வர் வெளியிட்டார்.
எங்கும் கிடைக்கப்பெறாமல் இருந்த அரிய 1,016 ஆன்மிக நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிட்டதன் மூலம் நமது பண்பாடு, கலாச்சாரம் மற்றும் கலை நுட்பங்களை அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ள வழிவகை செய்ததோடு, சமய நெறிகளை பாதுகாக்கும் காலப் பெட்டகமாக திகழும் இந்நூல்களை ஆவணப்படுத்திய பெருமை இவ்வரசையே சாரும்.
அதோடு மட்டுமல்லாமல் இந்நூல்கள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில், ஆணையர் அலுவலகம் மற்றும் 203 திருக்கோயில்களில் புத்தக விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
