புதுடெல்லி: போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் பரப்பும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என பாஜ வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக பாஜ தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் அமித் மாளவியா தன் எக்ஸ் பதிவில், “மேற்காசியாவில் நிலவும் போர் சூழல்கள் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், அதனால் விலைவாசி உயரும் என்றும் எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துகின்றன. இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியா வலுவான, பன்முகப்படுத்தப்பட்ட எரிசக்தி உள்கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. போர்கள், தடைகள் மற்றும் விநியோக இடையூறுகள் போன்ற ஆபத்துகளை உணர்ந்து, ட்ரைலெம்மா( எரிசக்தி முக்கோணம் – கிடைக்கும் தன்மை, மலிவு விலை மற்றும் நிலைத்தன்மை) என்ற உத்தியை ஒன்றிய அரசு பின்பற்றுகிறது. எனவே, இதுபோன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம். தற்போதைய நிலைமையை கையாள்வதில் அரசு உறுதி பூண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
