×

மடப்புரம் கோயில் காவலாளி மரண வழக்கில் நிகிதா ஆஜர்: எழுத்துப்பூர்வமாக கருத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் பொய் புகார் அளித்தது தொடர்பாக ஆஜரான நிகிதாவை எழுத்துப்பூர்வ கருத்தை தாக்கல் செய்யுமாறு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது, தனிப்படை காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நான்கு தனிப்படை போலீசார் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, செய்யாத குற்றத்திற்காக ஒருவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். பொய்யான புகார் அளித்ததாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, பொய் புகார் அளித்த நபர் மீது சிபிஐ விசாரணை நடத்தியுள்ளதா என கேட்டிருந்தார். இந்நிலையில் அஜித்குமார் கொலை வழக்கில் புகார்தாரரான நிகிதாவை அழைத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி, மார்ச் 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நிகிதாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த மனு நீதிபதி அசன் முகம்மது (பொ) முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிகிதா, நீதிபதி முன்பு ஆஜரானார். அவரிடம், ‘‘உங்களது புகாரை முடித்து வைக்க உள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு உங்களது கருத்து என்ன’’ என நீதிபதி கேட்டார். அதற்கு நிகிதா, ‘‘எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நான் புகார் கொடுத்தது தொடர்பான வழக்கை முடித்து வைக்கலாம்’’ என்றார். இதற்கு நீதிபதி, ‘‘உங்களது கருத்தை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என கூறி விசாரணையை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

* டெல்லி, அரசியல்வாதி தொடர்பு எனக்கு இல்லை: அஜித்குமார் மரணம் கேட்டு அழுதோம் நிகிதா பேட்டி
நீதிமன்ற விசாரணைக்கு பின் நிகிதா கூறுகையில், ‘‘எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது. என்னை சுற்றி எந்த அரசியல்வாதியும், வழக்கறிஞரும் கிடையாது. நான் முதன் முதலில் புகார் அளித்தது அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தான். அதன் பின்னர் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகார் அளித்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது.எனது தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை என்பது சிபிஐ அதிகாரிகள் மூலம் நிரூபணமாகிவிட்டது. எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அஜித்குமார் உயிரிழந்துவிட்டார் என்பது அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது. இதை கேட்டு நாங்கள் அழுதோம். தனிப்படையினர் அழைத்து சென்று விசாரித்தார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் காவல் நிலையத்தில் இருந்த வரையும் மடப்புரம் அஜித்குமாரும் காவல் நிலையத்தில் தான் இருந்தார்’’ என்றார்.

Tags : Nikita ,Madapuram ,Madurai ,Madurai court ,temple ,guard ,Ajithkumar ,Sivaganga district ,Thiruppuvanam Madapuram ,Kaliamman ,temple guard ,
× RELATED கிண்டியில் தனியாரிடம் இருந்து...