சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.03.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் சென்னையின் மையப்பகுதியான கிண்டி சுற்றுச்சூழல் பூங்காவை பெரியவர்கள், குழந்தைகள் அனைவரின் மனதை மகிழ்விக்கும் வகையில், கருத்தியல் தோட்டங்கள், குழந்தைகள் விளையாடும் திடல்கள், பறவைத் திட்டுகள், நீரியல் தோட்டம், புல்வெளிகள், காட்சி மேடைகள், நிழல் நடைபாதைகள் போன்ற கட்டமைப்புகளுடன் 37 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவில் இந்தியாவிலேயே முதன் முறையாக 11 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 30 மீட்டர் உயர செங்குத்துத் தோட்டத்துடன், 9 அடுக்குகளைக் கொண்ட உலகத்தரத்திலான Super Tree Tower என்னும் ”உயர் கோபுர மரத்தினை” திறந்து வைத்து, தமிழ்நாட்டில் வனங்கள் மற்றும் மரங்களால் சூழப்பட்டுள்ள பரப்பினை 33 சதவீதமாக மாற்றும் குறிக்கோளினை அடையும் வகையில் ’தமிழ்நாடு வேளாண் காடுகள் வளர்ப்புக் கொள்கை 2026’ வெளியிட்டார்.
கிண்டி, சுற்றுச்சூழல் பூங்காவின் முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
சென்னையின் மையப்பகுதியான கிண்டியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நிலம் தனியாரிடமிருந்து நீண்ட சட்டப்போராட்டத்திற்குப்பிறகு மீட்கப்பட்டு, 118 ஏக்கர் நிலம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. இவ்விடத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மழைநீரை சேகரிக்கும் வகையிலும், சென்னையின் மையப்பகுதியை பெரும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் நான்கு குளங்கள் அமைக்கப்பட்டன. இங்கு அமைத்துள்ள நீர்நிலைகளின் கரைகளை சீரமைக்கும் பணிகள், அரியவகை மரங்கள், அழகிய மலர்ச் செடிகள் நடவு செய்தல் மற்றும் நாற்றங்கால் பணிகள் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பூங்காவில், கருத்தைக் கவரும் கருத்தியல் தோட்டங்கள், குழந்தைகள் குதூகலித்திட விளையாட்டுத்திடல்கள், பறவைகள் விளையாடிட பறவைத் திட்டுகள், கண்கவர் நீரியல் தோட்டம், பசுமையான புல்வெளிகள், இயற்கையோடு இயைந்த அடர்வனம், பூங்காவை முழுமையாகக் கண்டு களித்திட காட்சி மேடைகள், மரங்கள் சூழ்ந்த, நிழலுடன் கூடிய நடைபாதைகள் போன்ற கட்டமைப்புகளுடன் 25 ஏக்கர் பரப்பில், 37 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள முதற்கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இப்பூங்காவானது, நகரின் இயற்கைச் சூழலைப் பேணுவதுடன், காற்றின் தரத்தை மேம்படுத்தவும், பல்லுயிர் பாதுகாப்பை உறுதி செய்யவும், மழைநீர் சேகரிப்பின் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் ஏதுவான கூறுகளைக் கொண்டு அமையவுள்ளது. மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு மையமாகவும் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் இப்பூங்கா செயல்படும்.
திறந்து வைக்கப்பட்ட புதிய கட்டடங்களின் விவரங்கள்
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவினைப் போற்றிடவும், இயற்கையோடு இயைந்த சூழலில் கண்ணாடி மாளிகை, ஜிப்லைன், பறவையகம், இசை நீரூற்று, மரவீடு, தோட்டக்கலை அருங்காட்சியகம், பனிமூட்டப்பாதை, தொடர் கொடி வளைவுப்பாதை போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களைக்கொண்ட சென்னை கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு அரசால் மீட்கப்பட்ட 6.09 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து 13.21 ஏக்கரில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவிற்கு மேலும் சிறப்பூட்டும் வகையில் வான்வழிப் பார்வையில் சென்னை மாநகரின் எழிலினை பொதுமக்கள் கண்டுகளித்திட 11 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் இந்தியாவிலேயே முதன் முறையாக 30 மீட்டர் உயர செங்குத்துத் தோட்டத்துடன் அமைக்கப்பட்டுள்ள, 9 அடுக்குகளைக் கொண்ட உலகத்தரத்திலான Super Tree Tower என்னும் ”உயர் கோபுர மரத்தினை” பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
