மதுரையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திப்பது கூட்டணி பேச்சுவார்த்தையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இன்னும் காலங்கள் இருக்கிறது. மதுரை மோடி பொதுக்கூட்டத்தில் பெரியார் படம் அகற்றப்பட்டதெல்லாம் எனக்குத் தெரியலை. பத்திரிகையில்தான் பார்த்தேன். தற்செயலாக நடந்திருக்கலாம். என்னன்னு தெரியல…
எதனால் அந்த படத்தை வச்சாங்க, எதுக்காக அகற்றினாங்கன்னு தெரியலை. இவ்வாறு கூறினார். அப்போது நிருபர்கள், செல்லூர் ராஜூவிடம், ‘‘எடப்பாடி அதிமுக ஆட்சி அமையும் என்றும், பிரதமர் மோடி என்டிஏ ஆட்சி என்றும் பேசி இருக்கின்றனரே?’’ என கேட்டதற்கு, ‘என்டிஏ ஆட்சியல்ல… என்டிஏ தலைமையிலான ஆட்சி. அதிமுக தலைமையில் ஆட்சிதான். அதிமுகதான் பாஸ். எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் என நானே கூறியிருக்கிறேன்’’ என்றார்.
பிரதமர் கூட்டத்திற்கு முதல் நாள் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், பெரியார் படத்தை அகற்றச் சொன்னபோது, எஸ்பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்பி.உதயகுமார் உள்ளிட்டோர் அங்கிருந்தனர். அவர்கள் முன்னிலையிலேயே படம் அகற்றப்பட்டது. ஆனால், தனக்கு இதுபற்றி தெரியாது என கூறி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து உள்ளார் என்று செல்லூர் ராஜூவை விமர்சிக்கும் நெட்டிசன்கள், ‘தூங்குறவங்கள கூட எழுப்பி விடலாம். ஆனா, ‘தூங்குற மாதிரி நடிக்குறவங்கள எழுப்ப முடியாது’ என கிண்டலடித்து வருகின்றனர்.
