சென்னை பல்லாவரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசியதாவது: குன்று இருக்கும் இட மெல்லாம் குமரன் இருப்பார் என்பார்கள். அதுபோல எண்ணெய் இருக்கும் நாடுகளுக்குள் அமெரிக்கா புகுந்துவிடுகிறது. தற்போது ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா – இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. ஈரான் இந்தியாவிற்கு மலிவான விலையில் எண்ணெய் கொடுத்து வந்த நட்பு நாடு. அந்த நாட்டின் மீதான தாக்குதலுக்கு ஒப்புதல் அளிப்பது போல் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் அமைந்துள்ளது. இந்தியா யாரிடம் பெட்ரோல் வாங்க வேண்டு மென்று அமெரிக்கா தீர்மானிக்கிறது.
மதுரைக்கு பலமுறை வந்துள்ள பிரதமர் மோடி ஒருமுறை கூட திருப்பரங்குன்றம், கீழடிக்குச் சென்றதில்லை. தற்போது குன்றத்திற்குச் சென்றுள்ளார். ராமரும், ஐயப்பனும் கைவிட்ட நிலையில் தற்போது முருகனைக் கடத்தப் பார்க்கிறார்கள். முருகன் ஆண்டியாகக் கோவணத்தோடு நிற்பாரே தவிர, ஒருபோதும் ஆர்எஸ்எஸ்-சின் காக்கி அரை டவுசரை அணிய மாட்டார். தனித்தன்மையை இழக்கமாட்டோம் என்று கூறும் எடப்பாடி, மதுரை பொதுக்கூட்டத்தில் இருந்த பெரியார் படத்தை பாஜக எடுக்கச் சொன்னதும் எடுத்து விட்டார். தங்களது தலைவர்கள் படத்தை வைக்கக் கூட கூட்டணியில் அதிமுகவிற்கு அனுமதி இல்லை. இதுதான் அதிமுக கூட்டணியின் நிலை. தமிழகத்தில் கரையேற முடியாத பாஜக என்ற கரடியிடம், எக்குதப்பாக அதிமுக மாட்டிக் கொண்டுள்ளது. அதிமுக ஆட்சி என்பது ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ஆட்சியாகவே இருக்கும்.
களத்திற்கு வராத விஜய் பாஜக சித்தாந்த எதிரி என்று கூறிவிட்டு அந்தக் கட்சியைப் பற்றி பேசவே மறுக்கிறார். தனது கட்சிக்கே ‘கால்ஷீட்’ கொடுக்கிறவராக உள்ளார். சும்மா இருக்கும்போதே மக்களைச் சந்திக்காதவர், முதலமைச்சராகி கிராமம் கிராமமாக வருவாராம். தலைவர் என்றால் களத்திற்கு வர வேண்டும். அவர் கூட்டம் நடத்தினாலே உயிரிழப்பு உறுதி என்றாகி விட்டது. பதவிக்காகக் கட்சியையே பாஜகவிடம் எடப்பாடி அடகு வைத்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியது. பாஜகவின் வஞ்சக வலையிலே அதிமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் விழுந்துள்ளன. எனவே அந்த கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
