நாங்குநேரி இரட்டை கொலையில் 7 பேர் கைது: மக்கள் 2வது நாளாக மறியல் ; போலீசுடன் தள்ளுமுள்ளு; பதற்றம் நிலவுவதால் ஏடிஜிபி நெல்லையில் முகாம்

களக்காடு: நாங்குநேரி அருகே பெட்ரோல் குண்டு வீசி இருவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் 2வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பதற்றம் நிலவுவதால் ஏடிஜிபி நெல்லையில் முகாமிட்டுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு 3 பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் போதையில் வெறியாட்டம் நடத்தியது. தெருக்களில் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசினர்.

மேலும் அங்குள்ள டீ கடையில் நின்றிருந்தவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் மாற்றுத்திறனாளி ஜான் (46), ஒடிசாவைச் சேர்ந்த செங்கல்சூளை தொழிலாளி டிரிநாத் கட்டா (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெரும்பத்தைச் சேர்ந்த நெல்சன் (57), பிரபாகரன், (49), ராமசாமி (74), கணேசன் (53) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அந்த கும்பல் கடம்போடுவாழ்வு அருகே சாலையில் நின்றிருந்த ஒருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. படுகாயம் அடைந்தவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தால் நாங்குநேரி பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. நெல்லை டிஐஜி சரவணன், எஸ்பி பிரசன்னகுமார் தலைைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கிராமத்துக்குள் புகுந்து வெறியாட்டம் போட்ட மர்ம நபர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்யக் கோரியும் நேற்று முன்தினம் ஏர்வாடி – நாங்குநேரி பிரதான சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பல மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகே போராட்டத்தை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நேற்று 2வது நாளாக பெரும்பத்து, இந்திரா காலனியைச் சேர்ந்த இரு கிராம மக்களும் நாங்குநேரி – ஏர்வாடி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தாண்டி, நாங்குநேரி – களக்காடு சாலைக்கு வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் ஆவேசமடைந்த பொதுமக்கள் நாங்குநேரி நான்குவழிச் சாலையில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக புறப்பட்டு ஓடினர். போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்தனர்.

பொதுமக்கள் ஆத்திரத்துடன் தடுப்புகளை தள்ளி விட்டனர். அப்போது போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெல்லை எஸ்பி பிரசன்னகுமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கொலை செய்யப்பட்ட ஜானின் மனைவி கண்ணகிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி உறுதி அளித்தார். இதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

எனினும் குற்றவாளிகள் கைது செய்யும் வரை ஜானின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி மீண்டும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கண்ணநல்லூரைச் சேர்ந்த கண்ணன், நாங்குநேரியைச் சேர்ந்த சுப்பையா, கல்யாணி, அந்தோணி மைக்கேல், நம்பிநகரைச் சேர்ந்த ராஜா, வள்ளியூரைச் சேர்ந்த உச்சிமாகாளி, நெடுங்குளத்தைச் சேர்ந்த வசந்தகுமார் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பெரும்பத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவரை கடந்த 2019ல் மஞ்சங்குளத்தைச் சேர்ந்த சாமித்துரை தரப்பினர் வெட்டிக் கொலை செய்ய முயன்றனர்.

அப்போது ஊர் மக்கள் திரண்டு வந்ததால் சாமித்துரை தரப்பினர் தப்பி விட்டனர். அங்கிருந்து ஏர்வாடி கோதைசேரிக்கு சென்ற கும்பல் கட்டிடத் தொழிலாளி செல்வகுமார் என்பவரை வெட்டி படுகொலை செய்தது. இதற்கு பழிக்குப்பழியாக 2022ல் மஞ்சங்குளத்தைச் சேர்ந்த சாமித்துரை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ராக்கெட் ராஜா, ஜேக்கப், பிரவீன் மற்றும் ராஜசேகர், முருகேசன் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சாமித்துரை கொலை சம்பவத்திற்கு பழி வாங்குவதற்காகவே நேற்று முன்தினம் இரட்டைக் கொலை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

கொலை கும்பல் கடம்போடுவாழ்வு வழியாக படலையார்குளம் பஸ் நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து படலையார்குளம் ஊருக்குள் சென்று நாகன்குளம் வரை பைக்கில் சுற்றியுள்ளது. நாங்குநேரியில் 2வது நாளாக பதற்றமான சூழல் நிலவுவதால் சட்டம், ஓழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள், தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, நெல்லை சரக டிஐஜி சரவணன், எஸ்பி பிரசன்னகுமார் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

* கல்நெஞ்சையும் கரைய வைத்த கதறல்
நாங்குநேரி அருகே பெரும்பத்தில் பைக்கில் வந்த போதை கும்பல் அரிவாள் வெட்டியதில் உயிரிழந்த ஜான் மாற்றுத் திறனாளி ஆவார். இவருக்கு வாய் பேச முடியாத கண்ணகி (40) என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். இதில் ஒருவர் 7ம் வகுப்பும், மற்றொருவர் 6ம் வகுப்பும் படித்து வருகின்றனர். ஜானை இழந்த குடும்பத்தினர் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.

* பசுபதி பாண்டியன் ஆதரவாளரை கொன்றவருக்கு தொடர்பா?
பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக்ராஜன் கொலை வழக்கில் கைதான நவீன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவில், ‘நெல்லை மாவட்டம், நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சியைச் சேர்ந்த நவீன் பேசுகிறேன். சிறிய வயதில் இருந்து எனக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என ஆசை. ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் போய் விட்டது. எனது அண்ணன் செய்த தவறுக்காக என்னை வழக்கில் சேர்த்து விட்டனர். அந்த வழக்கில் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறேன். போலீசார் என்னை நெல்லை மாவட்டத்திற்குள் நுழைய தடை விதித்துள்ளனர். போலீசாருக்கு கட்டுப்பட்டு நான் வெளி மாவட்டத்தில் இருந்து வருகிறேன். நாங்குநேரி பகுதியில் நடந்துள்ள அசம்பாவித சம்பவத்திற்கும், எனக்கும் தொடர்பு கிடையாது. அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

* கோட்டை விட்ட உளவுத்துறை
நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் 2 பேர் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் அவசரமாக நெல்லை வந்துள்ளார். கொலை சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதரி, நெல்லை டிஐஜி சரவணன், நெல்லை மாவட்ட எஸ்.பி. பிரசன்னகுமார் மற்றும் அதிகாரிகளிடம் இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்தும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்வது குறித்தும் அவர் நெல்லையில் ஆலோசனை நடத்தினார்.

தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட பெரும்பான்மையாக உள்ள 3 சமூகத்தைச் சேர்ந்த போலீசார் மற்றும் அதிகாரிகளை நியமிக்கக் கூடாது என்று கலைஞர் முதல்வராக இருந்தபோது உத்தரவிட்டிருந்தார். இதனால் தென் மாவட்டங்களில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த உத்தரவுகள் தற்போது மீறப்பட்டுள்ளன. குறிப்பாக உளவுத்துறை முழுவதும் 2 சமூகத்தின் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் உண்மையான கூலிப்படையினர் மீது எந்த அறிக்கையும் மேலிடத்துக்கு அனுப்புவதில்லை.

இதற்காக உளவுத்துறைக்கு மாமூல் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய உயர் அதிகாரிகளும் சாதி பாசத்துக்குள் விழுந்துள்ளதால், தென்மாவட்ட உளவுத்துறை தற்போது செயல் இழந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உளவுத்துறையை களை எடுக்காதவரை இதுபோன்ற கொலைகள் தென் மாவட்டங்களில் நடைபெறுவதை கட்டுப்படுத்துவது கடினமாகவிடும். ஆனால் பெயருக்கு சட்டம் ஒழுங்கு நல்ல அதிகாரிகளை போட்டு அவர்களை செயல்பட விடாமல் இருப்பதால் கடைசியில் அவர்களுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும் என்கின்றனர் நேர்மையான காவல்துறை அதிகாரிகள்.

* அரசு சார்பில் வீடு
மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் நெல்சன் (39), கணேசன் (35) ஆகியோரை சபாநாயகர் அப்பாவு சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டீன் ரேவதிபாலனை கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஜான் இல்லத்துக்கு சென்று அவரது மனைவி கண்ணகிக்கு ஆறுதல் கூறி, அரசு சார்பில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான அரசாணையை வழங்கினார். அவரது 2 பெண் குழந்தைகளின் கல்விச்செலவை அரசு ஏற்க நடவடிக்கை எடுப்பதாகவும், கண்ணகிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் சபாநாயகர் உறுதியளித்தார்.

Related Stories: