சென்னை: நாம ஒன்னும் விஐபி கிடையாது என்று பிரசார மேடைக்கு காரில் வந்த வானதியை ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் கடிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே நிறுவனர் பாரிவே ந்தர், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சிபாரதம் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிறைய பேர் பஸ், கார்களில் வந்தனர். இதனால், பிரசாரம் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் திணறியது. அப்போது அங்கு வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், போக்குவத்து நெரிசலை பார்த்து காரில் இருந்து இறங்கினார். தொடர்ந்து அவர் திடீரென போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது பிரசார மேடையை நோக்கி பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ காரில் வர முயன்றார்.
அப்போது அவரது வாகனத்தை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தடுத்து நிறுத்தினார். அவரிடம் நாம ஒன்னும் விஐபி கிடையாது என பியூஸ் கோயல் கோபத்துடன் கடிந்து கொண்டார். பதிலுக்கு வானதி சீனிவாசனும் ஏதோ பேசினார். அப்போது பியூஸ் கோயல் திடீரென அவரை பார்த்து முறைத்தார். தொடர்ந்து அங்கிருந்து வானதி சீனிவாசன் நடந்தே பிரசார மேடைக்கு சென்றார். வானதி சீனிவாசனை பார்த்து பியூஸ் கோயல் கோபத்துடன் கடிந்து கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
