வாலாஜாபாத், பிப்.25: வாலாஜாபாத் ஒன்றியம் நாயக்கன்குப்பம் ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம், நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், இ சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் இங்குள்ள மக்களின் பிரதான கோரிக்கையாக விளங்கி வந்தது சமுதாயக்கூடம். இந்த சமுதாயகூட கட்டிடத்தை கட்டி தரவேண்டும் என நாடாளுமன்ற தேர்தலின் போதும், சட்டமன்ற தேர்தலின் போதும் வேட்பாளர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சமுதாய கூடம் கட்டுவதற்கான பணி நடைபெற்று வந்தது.
தற்போது பணி நிறைவடைந்த நிலையில் சமுதாயக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சுந்தர் எம்எல்ஏ, செல்வம் எம்பி ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி சமுதாயக் கூட்டத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். தொடர்ந்து சமுதாய கூடத்தில் அதே கிராமத்தை சேர்ந்த ஜோடிக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுந்தர் எம்எல்ஏ தாலியினை எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். செல்வம் எம்பி, புதுமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து குழந்தை பெற்ற பின் குழந்தைக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள் என வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றியக்குழு துணை தலைவர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன், ஒன்றிய அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, கிளைச் செயலாளர் சேட்டு, கிளை பொருளாளர் சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தென்னேரி சத்யா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
