மதுராந்தகம், பிப்.25: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலமாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட மேலவலம்பேட்டை கிராமத்தில் நேற்று முன்தினம் காலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மதுராந்தகம் நகர்மன்ற தலைவர் மலர்விழிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், கருங்குழி பேரூராட்சித் தலைவர் தசரதன், துணைத் தலைவர் சங்கீதா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நந்திதா அனைவரையும் வரவேற்றார். இதில், மதுராந்தகம் நகரம், கருங்குழி பேரூர் மற்றும் வட்டாரத்தில் உள்ள 240 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, வளையல், பழங்கள், பலகாரங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து நலங்கு வைத்து வளையல் அணிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சுந்தர் எம்எல்ஏ, கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் ஹரிஹரசுதன், மகப்பேறு மருத்துவர் சங்கீதா, நகர செயலாளர் குமார், பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, தொகுதி பொறுப்பாளர் சாரதி மணிமாறன் உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணிகளின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம் நகர ஒன்றியத்தில் 240 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: சுந்தர் எம்எல்ஏ சீர்வரிசை வழங்கினார்
- மதுராந்தகம்
- சுந்தர் எம்.எல்.ஏ
- மேலவலம்பேட்டை கிராமம்
- கருங்குஜி
- மதுராந்தகம் தொகுதி சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறை
- செங்கல்பட்டு
