பூந்தமல்லி: திருவேற்காட்டில் உள்ள உலர் பழங்கள் குடோனில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து நடந்தது. இதில் ஒரு கோடி மதிப்பு பொருட்கள் எரிந்துவிட்டதாக தெரிகிறது. சென்னை அருகே திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை, பேரிச்சம்பழம் உள்ளிட்ட உலர் பழங்கள் சேமித்துவைத்து பேக்கிங் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. குடோனில் 50க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று அதிகாலை குடோனில் இருந்து புகை வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த தகவல்படி, பூந்தமல்லி, அம்பத்தூர், மதுரவாயல் மற்றும் ஆவடி ஆகிய பகுதிகளில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு குடோனில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். தீ விபத்தில் குடோனில் இருந்த ஒரு கோடி மதிப்பிலான விலை உயர்ந்த உலர் பழங்கள், கொட்டைகள் ஆகியவை எரிந்துவிட்டதாக தெரிகிறது.இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
