ஊத்தங்கரை, பிப்.28: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை கொம்மம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அம்புரோஸ்(35). இவர் கடந்த 15ம் தேதி, தனது மனைவி நந்தினியுடன்(25) ஊத்தங்கரைக்கு சென்றார். பின்னர், அங்குள்ள கடையில் தன்னிடம் இருந்த நகையை அடகு வைத்து, ரூ.20 ஆயிரம் பணத்தை வாங்கி நந்தினியிடம் கொடுத்தார். அப்போது, அனுமந்தீர்த்தத்தில் உள்ள கடையில், தான் அடகு வைத்துள்ள நகையை மீட்டுக் கொண்டு வருவதாக, அம்புரோசிடம் கூறி விட்டு, நந்தினி அங்கிருந்து சென்றார். ஆனால். அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம், ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் அம்புரோஸ் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து, மாயமான நந்தினி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
