மேட்டுப்பாளையம் தொகுதியில் கடந்த 1951 முதல் 2021 வரை நடந்த 16 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 4 முறையும், திமுக 2 முறையும், அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.செல்வராஜ் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் ஒக்கலிக கவுண்டர், வெள்ளாள கவுண்டர், நாடார், முதலியார் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் உள்ளனர். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் அதிகளவில் உள்ளனர். ஒக்கலிக கவுண்டர் சமூகத்தினர் கூடுதலாக இருக்கின்றனர். இந்த தொகுதியில் 1,33,022 ஆண்கள், 1,46,382 பெண்கள், 34 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,79,438 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் அதிமுக வலிமையாக இருந்தாலும், திமுகவும் சமபலத்துடன் இருக்கிறது.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்ட பிறகு, அவர் வகித்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளராக எம்எல்ஏ. ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டார். தற்போது அதிமுக தலைமை செங்கோட்டையனை எதிர்த்து அந்த தொகுதியில் ஏ.கே.ெசல்வராஜை களமிறக்க முடிவு செய்து அவரிடம் தெரிவித்துள்ளது. அதற்கு அவர் நான் போட்டியிட்டால் மேட்டுப்பாளையம் தொகுதியில் தான் போட்டியிடுவேன், இல்லையென்றால் கட்சியின் தேர்தல் பணிகளை கவனித்துக்கொள்கிறேன் எனவும், ஈரோட்டில் நீங்கள் நிற்க வைக்கும் நபர் வெற்றி பெற பணியாற்றுவேன் எனவும் கூறியிருக்கிறார். இவரை கட்சி தலைமை வேறு தொகுதியில் போட்டியிட வைக்க முக்கிய காரணம் பாஜ சார்பில் மேட்டுப்பாளையம் தொகுதியை தங்களுக்கு அளிக்க கேட்டு அடம் பிடித்து வருகிறார்களாம்.
குறிப்பாக, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நீலகிரிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் பாஜவுக்கு நிறைய வாக்குகள் கிடைத்ததாக கூறி அதிமுகவிடம் இருந்து மேட்டுப்பாளையம் தொகுதியை கேட்டு வருகின்றனர். இந்த தொகுதியில் அதிகம் உள்ள சமூகத்தை சேர்ந்த நபரை களமிறக்கி நிச்சயமாக வெற்றியை பெறுவோம் என கூறுகின்றனர். மேட்டுப்பாளையம் தொகுதியை தங்கள் வசமாக்க ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் உதவியுடன் காய்களை பாஜவினர் நகர்த்தி வருகின்றனர். இதனால், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியை கூட்டணிக்கு அளிக்க வேண்டும் என அதிமுக தலைமையை பாஜவினர் தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகின்றனர். எனவே, இந்த தொகுதியை பாஜவுக்கு அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
* எல்லாத்தையும் மக்கள் மேல போடாதீங்க விஜய்: அண்ணாமலை குட்டு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் அளித்த பேட்டி:
கூட்டணியில் இடங்கள் குறித்து பேசுவது எல்லாம் பியூஸ் கோயல் இலாகா. அவர்கள் கூட்டணி குறித்து பேசி சரியாக முடிவு எடுப்பார்கள். விஜய்யை பொறுத்தவரை, தமிழக மக்கள் தெளிவாக இருக்கின்றனர். யார் வரவேண்டும் என முடிவு செய்வார்கள். தே.ஜ.கூட்டணியில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள். மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவர்கள். விஜய்யை திட்டுவது தமிழ்நாட்டு மக்களை திட்டுவதாக அவர் நினைத்துக் கொள்கிறார். அரசியலில் விமர்சனம் எல்லார் மீதும் தான் வைக்கப்படும். நம் மீது விமர்சனம் வைப்பது தமிழ்நாடு மக்களின் மீது வைக்கும் விமர்சனம் என அரசியல்வாதிகள் சொல்லக்கூடாது.
எல்லோரும் வருவார்கள் என டிடிவி பேசி இருக்கிறார். ஓபிஎஸ் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஓபிஎஸ் விவகாரத்துக்குள் போக விரும்பவில்லை. எல்லாருக்கும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும். பலமுறை முதல்வராக ஓபிஎஸ் அவர்களை ஜெயலலிதா கொண்டு வந்து இருக்கிறார். ஓபிஎஸ் அவர்களை பொறுத்தவரை ஜெயலலிதாவின் ஆட்சி என்பதில் இருக்கின்றார். ஒற்றைக் கோட்டில் இருக்கும் பொழுது, ஓபிஎஸ்சுக்கு பிரச்னை இருக்காது. சசிகலா கட்சி ஆரம்பித்திருக்கிறார். இன்னும் காலம் இருக்கிறது பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
