கிரிஷ் சோடங்கரின் கருத்தை திரித்து வெளியிட்டுள்ளனர் திமுக ஆதரவுடன் மாநிலங்களவைக்கு காங்கிரஸ் வேட்பு மனு தாக்கல்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: திமுகவுடன் தான் காங்கிரஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறது, கிரிஷ் சோடங்கரின் கருத்தை திரித்து வெளியிட்டுள்ளனர். திமுக ஆதரவுடன் மாநிலங்களவைக்கு இன்னும் 2 நாளில் காங்கிரஸ் வேட்பு மனு தாக்கல் செய்யும் என்று செல்வப்பெருந்தகை கூறினார். திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தமிழக காங்கிரஸ் கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று சிலர் வெளிப்படையாக விமர்சித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், டி.எஸ்.சிங் தியோ ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்றனர். அங்கு தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர். இந்நிலையில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘காங்கிரசுடன் கூட்டணி வைக்க தவெக தயாராக இருக்கிறது. அரசியலில் நீங்கள் எல்லோருடனும் பேச வேண்டும். எந்தக் கட்சிதான் அதிகாரத்துக்கு ஆசைப்படாது” என்று கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கிரிஷ் சோடங்கர் பேட்டியை, யூகங்கள் அடிப்படையிலும் ஆதாரப்பூர்வமாக இல்லாத போது எப்படி வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் திமுகவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று பலமுறை சொல்லியுள்ளார். மதவாத சக்திகள் தமிழ்நாட்டை அபகரிக்க துடித்துக் ெகாண்டிருக்கின்றனர். இதை எதிர்க்க காங்கிரஸ் போராடுமா அல்லது உள்ளே வர அனுமதிப்போமோ?. இது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.

கிரிஷ் சோடங்கரிடம் நிருபர் கேள்வி கேட்ட போது அவர், ‘எந்த ஒரு அரசியல் கட்சியும் பேசக் கூடாதுன்ல்லாம் கிடையாது என்று ஒரு டெமகிரட்டிக்காக தான் பேசினார். அதற்காக காங்கிரஸ் திமுகவுடன் பேசவில்லை என்றா சொல்வது. நானும் கிரிஷ் சோடங்கரிடம் தொலைபேசியில் பேசினேன். அப்படி நான் சொல்லவில்லை என்று அவர் மறுக்கிறார். திமுகவுடன் நல்லுறவு இல்லாவிட்டால், கே.சி.வேணுகோபால் ஏன் முதல்வரை சந்திக்க வேண்டும், நான் ஏன் கனிமொழியை சந்திக்க வேண்டும்?. நல்லுறவு இருப்பதால் தான் சந்திக்கிறோம். சில சக்திகள் ஏதாவது கூட்டணியை சிதைக்க முடியுமா? பாஜவுக்கு மறைமுகமாக உதவ முடியுமா என்று சில பேர் முயற்சிக்கின்றனர். அது ஒருபோதும் பலிக்காது. காங்கிரஸ் அகில இந்திய தலைமை உறுதியாக இருக்கிறது. கிரிஷ் சோடங்கர் கூறியதை திரித்து எழுதுகின்றனர். இதை நான் மறுக்கிறேன்.

சொல்லாததை திரித்து எழுதியுள்ளனர். தமிழ்நாட்டை அழிப்பதற்கு, ஒழிப்பதற்கு அதிமுகவை ஒரு முகமூடி போட்ட பாஜவாக வைத்துள்ளனர். அப்படி இருக்கும் போது அதிமுகவும் பாஜவும் தமிழகத்தில் காலூன்ற காங்கிரஸ் அனுமதிக்குமா?. காங்கிரஸ், இவ்வளவு காலம் பண்ணிய தியாகத்துக்கு என்ன அர்த்தம். திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது, வலிமையாக இருக்கிறது. இதை சிதைக்க முடியாது, அழிக்க முடியாது என்று மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன். இதை முயற்சிக்கும் சக்திகள் தோல்வியடையும். மறைமுகமாக பாஜவுக்கு உதவ சில சக்திகள் உதவுகின்றன. அந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது.

எங்களுக்குள் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் அகில இந்திய தலைமை தலையிட்டுள்ளது. அகில இந்திய தலைமை முடிவு செய்யும். உடனே எப்படி இப்படி எல்லாம் திரிபு செய்தியை வெளியிட முடியும். யார் இந்த தகவலை வெளியிட்டார்களோ அவர்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கிரிஷ் சோடங்கர் கருத்தை திரித்து கூறுகிறார்கள். திமுகவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். வேறு யாருடனும் பேச்சு நடத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால் மாநிலங்களவை தேர்தலில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் 2 நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அந்த அளவுக்கு திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: