இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்: தலைவர்கள் புகழஞ்சலி: முழு அரசு மரியாதை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது 101. அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக இன்று சென்னை மருத்து கல்லூரிக்கு ஒப்படைக்கப்படுகிறது. கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நல்லகண்ணு மறைவுக்கு தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர். தகைசால் தமிழரை முழு அரசு மரியாதை செலுத்தி வழியனுப்பி வைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு, சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். உடல்நல குறைவு காரணமாக நல்லகண்ணு கடந்த ஆண்டில் இருந்து அவ்வப்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 1ம் தேதி நோய்த்தொற்று மற்றும் இணை நோய்களால் (ரத்த கொதிப்பு, சிறுநீரக கோளாறு, உணவை விழுங்க முடியாமை) மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதனால், அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலையில் கடந்த திங்கட்கிழமை திடீரென பின்னடைவு ஏற்பட்டதால், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால் மருத்துவ குழுவினர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதே போல, தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களும், குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொது செயலாளர் டி.ராஜா, இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்டோர் நலம் விசாரித்து, மருத்துவமனையில் இருந்தனர்.

கடந்த 23ம் தேதி அவரது உடல்நலனில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாச கருவி சிகிச்சை மற்றும் மருந்துகள் பல்வேறு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி அதிகரிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி 24 மணிநேர தொடர் அதிதீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் 1.55 மணி அளவில் சிகிச்சை பலனின்றி நல்லகண்ணு காலமானார், என்று சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அவர் மறைந்த செய்தி கேட்டு அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் வந்து நல்லகண்ணு உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த நல்லகண்ணுவின் உடல், சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி முதல் இன்று பிற்பகல் 3 மணி வரை நல்லகண்ணு உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தி, நல்லகண்ணு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, ஆ.ராசா எம்பி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

அதை தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு அவரது உடல் பொதுமக்கள் அணிவகுப்புடன் சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, மருத்துவ ஆய்வுக்காக கொடையளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.  நல்லகண்ணு இறப்புக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் 7 நாட்கள் துக்கம் கடைபிடிக்கும் வகையில் செங்கொடிகள் அரைக்கம்பத்தில் தாழ்த்தி பறக்கவிடப்பட்டன. சுதந்திர போராட்ட வீரும் போராளியுமான நல்லகண்ணு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் வசதியான விவசாய குடும்பத்தில் 1925 டிசம்பர் 26ம் தேதி பிறந்தார்.

இவருடைய குடும்பத்தில் இவருடன் சேர்த்து மொத்தம் 10 பேர். பள்ளிப்பருவ காலத்தில் நடைபெற்ற நாட்டின் விடுதலை போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, சிறுவர்களை அணி திரட்டி, பாரதியின் பாடல்களை தெருத்தெருவாக பாடி, சுதந்திர கனலை மூட்டியவர். பள்ளி ஆசிரியர் பலவேசம் வழியாக கம்யூனிஸ்ட் கொள்கை வழியை தேர்வு செய்து கொண்டவர்.
திருநெல்வேலி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்த நல்லகண்ணு, கட்சி தலைமையத்துக்கு அழைத்து வரப்பட்டார். இங்கு கட்சி தகவல் மைய பொறுப்பாளராக செயல்பட்டார்.

பின்னர் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டு 1992 வரையிலும் அப்பொறுப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டு, சங்க அமைப்பை விரிவுபடுத்தி, புதிய ஊழியர்களையும் கண்டறிந்து சங்க பணிகளில் இணைத்துக் கொண்டவர். நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளானவர். இவர் ஒன்பதரை ஆண்டுகள் சிறை வாழ்க்கை அனுபவமும், சில ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை அனுபவமும் பெற்றுள்ளார்.

நாங்குனேரி வட்டாரத்தில் மடத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து, விவசாயிகள் நில உரிமைக்காக போராடி வெற்றி கண்டவர். குறிப்பாக 1982ம் ஆண்டில் மீனாட்சிபுரத்தை மையமாக கொண்டு, மதவெறி சக்திகள் கலவரத்தை உருவாக்கிய போதும் 1993 – 1998 காலகட்டங்களில் சாதி கலவரங்கள் வெடித்து மக்கள் பெருந்துயரத்துக்கு ஆளான போதும், தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து செயல்பட்டு அமைதியை நிலைநாட்ட பெரும் பங்களித்தவர்.

சமூக அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் முனைப்புடன் பணியாற்றிய நல்லகண்ணுவின் மாமனார் அண்ணாசாமி மருதன் வாழ்வில் சாதி வெறியர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதற்காக அரசு தரப்பில் வழங்கிய வெகுமதிகளை சாதி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பொறுப்புக்கு 1992ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டார்.

2005ம் ஆண்டு வரை அந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர் எனும் உயர்ந்த வடிவம் பெற்றவர். மேலும் நல்லகண்ணுவின் பொதுச் சேவையைப் பாராட்டி, பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி சிறப்பு செய்துள்ளன. தனது 80வது பிறந்தநாளையொட்டி கட்சி வசூலித்து கொடுத்த ரூ.1 கோடியை கட்சிக்கே திருப்பிக் கொடுத்தவர். தமிழ்நாடு அரசு 2007ல் டாக்டர் அம்பேத்கர் விருதும், 2022ல் தகைசால் தமிழர் விருதும் வழங்கி சிறப்பித்துள்ளது.

விருது தொகை ரூ.10 லட்சத்துடன் ரூ.5000 சேர்த்து இயக்க வளர்ச்சிக்கும், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கும் வழங்கினார். நல்லகண்ணு, ரஞ்சிதம் அம்மையாரை வாழ்விணையராக பெற்றவர். அவர் 2016ம் ஆண்டில் காலமானார். இவர்களுக்கு ந.காசிபாரதி, டாக்டர் ந.ஆண்டாள் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மருமகன் வழக்கறிஞர் எஸ்.அழகுமுத்துபாண்டியன், இரண்டாவது மருமகன் டாக்டர் என்.பழனி மருத்துவராக பணியாற்றியவர். இருவரும் சில ஆண்டுகள் முன்பு காலமாகிவிட்டனர்.

இவர்களுக்கு சதிஷ் என்கிற பேரனும், ரஞ்சனி கண்ணம்மா, பிரியா ஆகிய 2 பேத்திகளும் உள்ளனர். பொது வாழ்வில் தூய்மை, எளிமை, நேர்மை, தன்னலமறுப்பு இவைகளின் வாழும் அடையாளமாக திகழ்ந்து தமிழக மக்களின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்றவர். வகுப்புவாத, சாதவெறி சக்திகளுக்கு எதிராக சமரசமின்றி போராடி வந்தவர் நேற்று உயிரிழந்தது கட்சியை கடந்து அனைவரையும் வருத்தமுறச் செய்தது.

அனைவரும் அவருக்கு செவ்வணக்கம் செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.நகர் பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணுவின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகள், இயக்கத்தினர்அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

* மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்தது: மருத்துமனை அறிக்கை
நல்லகண்ணு சிகிச்சை தொடர்பாக ராஜிவ்காந்தி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1ம் தேதி நல்லகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 நாட்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தது. பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.

அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நேற்று பிற்பகல் 1.55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவக் குழுக்களுக்கும், தமிழக அரசுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

* காங்கிரஸ் டூ கம்யூனிஸ்ட்
நல்லகண்ணு ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியால் ஈர்க்கப்பட்டார். தூத்துக்குடியில் வ.உ.சி நடத்திய சுதேசி இயக்கத்தாலும், கிராமியக் கூட்டங்களில் பாடப்பட்ட பாரதியார் பாடல்களால் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. இருப்பினும் அவரது தொடக்க வாழ்க்கை காங்கிரஸ் கட்சியினருடன் சேர்ந்து இருந்தது. சிறுவயதிலேயே 1930களில் நடந்த ஹார்வி மில்ஸ் வேலைநிறுத்தத்தின் போது அவரது செயல்பாடுகள் தொடங்கின. மற்ற இளைஞர்களுடன் இணைந்து, வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரிசி சேகரித்து விநியோகித்தார். 12 வயதிலேயே, 1937ம் ஆண்டு மாகாணத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு நல்லகண்ணு பிரசாரங்களில் பங்கேற்றார்.

* எளிமையிலும் தாராளம்
நல்லகண்ணு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். கட்சியின் முழுநேர ஊழியர்களுக்கான மாதப்படி ரூ.2,500ம், ஓய்வுபெற்ற அரசு ஆசிரியரான அவரது மனைவியின் ஓய்வூதியம் ரூ.4,500ம் மட்டுமே அவரது வருமானமாக இருந்தது. 2007ம் ஆண்டு வரை, சென்னையில் சிஐடி நகரில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். அப்போதைய திமுக அரசு வாடகை செலுத்த கோரவில்லை. ஆனாலும் நல்லகண்ணு தவறாமல் வாடகை செலுத்தினார்.

* நேர்மையே அடையாளம்
தனக்காகவும் குடும்பத்துக்காகவும் புத்தகங்களைத் தவிர எதையும் சேர்த்து வைக்காத தலைவர் நல்லகண்ணு. எளிமையும், நேர்மையுமே தனது அடையாளமாக வாழ்ந்து மறைந்தவர். ஒருமுறை தனது மகள் ஆண்டாளின் காது குத்து விழாவுக்கு எதுவும் வாங்காமல் வெறுங்கையுடன் போய் நின்றார் நல்லகண்ணு. தோடு வேண்டும் என்று கேட்ட பிறகு நண்பர்கள் சிலரின் உதவியோடு, கவரிங் கம்மலை வாங்கிக் கொடுத்தார்.

எல்லோரும் அதிர்ச்சியோடு பார்த்தபோது, ‘இதையே குத்துங்கள் போதும்’ என்று சொன்னவர் நல்லகண்ணு. ஒருமுறை அவருடைய மகள் 3 நாட்கள் கட்சி அலுவலகத்திலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அங்கேயே தங்கி, சாப்பிட்டு வந்தார். பின்னர் தனது மகள் புறப்பட்டபோது, மூன்று நாட்கள் உணவுக்கான 110 ரூபாயை வசூலித்து கட்சி அலுவலகத்தில் நல்லகண்ணு கட்டிய வரலாறு அவருக்கு உண்டு.

Related Stories: