×

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வந்தார் அனைத்துக்கட்சி நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகளிடம் இன்று ஆலோசனை: சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று சென்னை வந்தார். பின்னர், தனி விமானத்தில் புதுச்சேரி சென்று ஆலோசனை நடத்தினார். இன்று காலை சென்னையில், அனைத்துக்கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். மாலை போலீஸ் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடைபெறுகிறது.

தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்பட 7 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 12.55 மணிக்கு சென்னை வந்தனர். இந்திய தேர்தல் அதிகாரிகளை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரவேற்றார். பின்னர், 1.30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த தனி விமானத்தில் புதுச்சேரி புறப்பட்டு சென்றனர்.

புதுச்சேரியில் நேற்று மாலை தேர்தல் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். நேற்று இரவு புதுச்சேரியில் தேர்தல் அதிகாரிகள் தங்கினர். இதைத்தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வரும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சென்னை, எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார்கள். அங்கு இன்றும், நாளையும் தமிழக தேர்தல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபடுகிறார்கள்.

முதல்கட்டமாக இன்று காலை 11 மணிக்கு தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன், தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது, எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தலாம் என்பது குறித்து தனித்தனியாக தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். இதற்காக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் தேசிய கட்சிகள் உள்ளிட்ட 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து இன்று மதியம் 3 மணிக்கு தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை கமிஷனர், உள்துறை செயலாளர், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (அனைத்து மாவட்ட கலெக்டர்கள்), அனைத்து மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. 2வது நாளாக நாளை (27ம் தேதி) மதியம் 12 மணிக்கு சென்னை ஓட்டலில் நிருபர்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சந்திக்கிறார்.

இதைத்தொடர்ந்து நாளை மதியம் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை, வங்கி அதிகாரிகள், தபால் துறை உள்ளிட்ட 23 தேர்தல் தொடர்பான விசாரணை முகமைகளின் உயர் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். இரண்டு நாள் ஆலோசனையிலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். 2 நாள் ஆலோசனையை முடித்துக் கொண்டு நாளை இரவு டெல்லி செல்ல முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் 2 நாள் நடைபெறும் ஆலோசனையின்போது, தேர்தல் முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், இரண்டு மாநிலங்களிலும் எந்த தேதியில் தேர்தல் நடத்துவது மற்றும் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் முடிவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

* தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது?
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2ம் தேதிதான் நடந்தது. கொரோனா காலம் என்பதால், அப்போது முன்கூட்டியே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பின்னர், மற்ற 4 மாநிலங்களிலும் நடைபெற்ற பல கட்ட தேர்தலுக்கு பிறகு மொத்தமாக மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த முறை வெயிலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் மத்தியில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்தலாமா என்று தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, 5 மாநில தேர்தல்களை 5 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் கடைசி கட்டமாக தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.

தமிழகத்தில் கடந்த 1952ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று வந்தாலும், ஆரம்பத்தில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே தேர்தல் நடந்துள்ளது. அதன்பிறகு பெரும்பாலும் மே மாதமே சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பு, 2001 (மே 10), 2006 (மே 8), 2016 (மே 16) ஆகிய ஆண்டுகளில் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுள்ளது. 2011 (ஏப்ரல் 13), 2021 (ஏப்ரல் 6) ஆண்டுகளில்தான் ஏப்ரல் மாதமே தேர்தல் நடந்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் மத்தியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் மாதம் 2வது வாரம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Tags : Chief Election Commissioner ,India ,Gyanesh Kumar ,Chennai ,Tamil Nadu ,Puducherry ,Chief Election Commissioner of ,
× RELATED சென்னை மீனம்பாக்கம், கிண்டி பகுதியில்...