சென்னை: ப்ரோ கோட் படத்தலைப்பு விவகாரத்தில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் மற்றும் டெல்லியை சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு இடையே சமரசம் ஏற்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. நடிகர் ரவி மோகன் தயாரித்து நடிக்கும் ப்ரோ கோட் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், ப்ரோ கோட் என்ற பெயருக்கு தங்களது நிறுவனம் பதிப்புரிமை பெற்றுள்ளதால் அதை பயன்படுத்தக் கூடாது என்று டெல்லியை சேர்ந்த இண்டோ பேவ்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற மதுபான உற்பத்தி நிறுவனம் தரப்பில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ப்ரோ கோட் படத்தின் தலைப்பை தனது படத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கக்கூடாது என்று மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி ரவி மோகன் ஸ்டூடியோஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ப்ரோ கோட் பெயரை பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என்று மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்தார். இதையடுத்து, ரவிமோகன் தரப்பு வழக்கை வாபஸ் பெற்றது.
