×

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை வெளிப்படையாக நடத்தி முடிக்க வேண்டும், என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையர்களின் தேசிய வட்டமேசை மாநாடு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூய்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பே ஜனநாயகத்தின் அடித்தளம். வெளிப்படையான மற்றும் திறன் மிக்க தேர்தல் நடத்தல் ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களுடனும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்க நடைமுறைகள் மற்றும் சட்டரீதியாக செயல்படுத்தக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். தேர்தல் செயல்முறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது.

இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல் பகிர்வு மற்றும் இந்திய ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தின் உலக தரமான உட்கட்டமைப்பை பகிர்வதும் அடங்கும். பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் சட்டங்களை, பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான சட்டங்களுடன் ஒத்துழைப்பு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையர்கள் இணைந்து செயல்படுவார்கள்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையம் தலைமையில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளுடன் இணைந்து, ஆண்டுதோறும் ஒரு முறை தேசிய வட்டமேசை மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை வெளிப்படையாக நடத்தி முடிக்க வேண்டும், என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Chief Election Commissioner of India ,Chennai ,Chief Election Commissioner of ,India ,National Roundtable Conference of Election Commission of India ,State Election Commissioners ,Delhi ,Gyanesh… ,
× RELATED ‘வெற்றிவேல்’ யாருக்கு?