*அமைச்சர் கீதாஜீவன் அறிவுறுத்தல்
தூத்துக்குடி : ஆண், பெண் குழந்தையை கண்காணித்து பெற்றோர் சமமாக வழிநடத்த வேண்டும் என்று மகளிர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் அனைத்து மகளிர் குழுக்கள் சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில், பெண்களை சமையல் வேலையில் மட்டுமே முடக்கப்பட்டிருந்த காலம் மாறி இப்போது எல்லாத்துறையிலும் சாதனை படைத்துக் கொண்டு வருகின்றனர்.
ஒரு குடும்பத்தை வழி நடத்துவதற்கு நங்கூரமாக இருப்பதே பெண்கள் தான். தாய், தந்தையர் நமக்கு முக்கியம். அதேபோல் குழந்தைகளும் முக்கியம்.
ஆண், பெண் என இருவரையும் ஒரே சமமாக வழிநடத்தி அவர்கள் யாரிடம் எல்லாம் பழகுகிறார்கள், எங்கெல்லாம் செல்கிறார்கள் என்பதை காலத்தின் கட்டாயத்திற்கேற்ப கண்காணிக்க வேண்டும். அப்போது தான் சிறுவயதில் இருந்து நல்ல பழக்கவழக்கத்தை கடைபிடிக்கும்.
கல்வி ஒன்று தான் நமக்கு மிகப்பெரிய சொத்து. வளர்ச்சிக்கும், அறிவாற்றல் மிக்கவர்களாக உருவாகுவதற்கும் வாய்ப்பாக இருக்கிறது. குழந்தைகளை நல்ல முறையில் பெற்றோர் படிக்க வேண்டும்.
பல்வேறு வகையில் வளர்ச்சியடைந்துள்ள பெண்கள் தங்கள் உடல் நலத்தையும், பேணி பாதுகாப்பது அவசியம். வீட்டில் அதிகாலை எழுந்து கோலம் போடுவதில் இருந்து இரவு தூங்கும் வரை அனைத்து பணிகளையும் செய்வது பெண்கள் தான்.
எனவே சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். கணவருக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு பசி பட்டினியோடு இருக்க கூடாது. அதேபோல் கர்ப்ப காலத்தில் 3 வேளை நல்ல உணவுகளை சாப்பிட்டால்தான் பிறக்கின்ற குழந்தை எடை குறையாமல் ஆரோக்கியமாக பிறக்கும். 2 வயது வரை அதற்கு தேவையான உணவுகளை கொடுத்தால் உடல் வளர்ச்சியும் மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
எல்லோருக்கும் உற்றார் உறவினர்கள் முக்கியம் என்று கருதி அந்த பழக்கத்தையும் தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பகுதியில் பெண்கள் கூடி பேசும் போது வளர்ச்சிக்கான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டு நட்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சியில் விடியல்பயணம், மகளிர் உரிமைத்தொகை என பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி மூலம் தொழில் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மகளிர் உரிமைத்தொகையை தடுப்பதற்கு சிலர் நீதிமன்றம் வரை சென்ற நிலையை அறிந்து முதலமைச்சர் 3 மாதத்திற்கு சேர்த்து ரூ.3 ஆயிரம், கோடை காலத்திற்கு ரூ.2 ஆயிரம் என ரூ.5 ஆயிரம் வழங்கி உள்ளார். பெண் சமுதாயம் முன்னேறினால் தான் சமுதாயம் முன்னேற்றமடையும். முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த வரும் தோ்தலில் அனைவரும் திமுகவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும், என்றார்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாதர் சங்க மாநில நிர்வாகி ராஜலட்சுமி, மாவட்ட சுகாதாரதுறை அலுவலர் யாழினி, வக்கீல் சொர்ணலதா, அரசுத்துறை சேர்ந்த ஸ்வர்ணலதா, ரூபி பெர்னாண்டோ, மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகர திமுக துணை செயலாளர் பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், கவுன்சிலர்கள் தனலட்சுமி, முத்துமாரி, ராமு அம்மாள், சுப்புலட்சுமி, வைதேகி, ஜெயசீலி,
பவானி, ஜான்சிராணி, மரியகீதா, ரெக்ஸ்லின், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், டாக்டர்கள் சிவசைலம், மகிழ்ஜான், யூனியன் முன்னாள் சேர்மன் கஸ்தூரிதங்கம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட செயலாளர் கருப்பசாமி, வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
