புதுடெல்லி: நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் கீழ் வரைவு வாக்காளர் பட்டியலில் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. மேலும் 1.25 கோடி வாக்காளர்கள் முரண்பாடான தகவல்களை வழங்கியதாக கூறி அவர்களிடம் ஆவணங்களை தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், முரண்பாடான தகவல்களை வழங்கியதாக வகைப்படுத்தப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை அனைத்து கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் காட்சிப்படுத்த வேண்டும். அவர்கள் ஆவணங்கள் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் அந்த அலுவலகத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
அதேப்போன்று எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில், மூடிய கதவுகளுக்குப் பின்னால் நீதி கதறுகிறது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார்.இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் வி.எம்.பஞ்சோலி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தரப்பில் இருந்து ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ” மேற்கு வங்கத்தில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகள் விவகாரத்தை பொருத்தமட்டில் அந்த பணிகளுக்காக 250 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு நீதிபதி சராசரியாக 250 வாக்காளர்களின் ஆவணங்களை ஆய்வு பணிகளை மேற்கொண்டாலும் 50 லட்சம் வாக்காளர்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய சுமார் 80 நாட்கள் தேவை ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,” பிப்ரவரி 28ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதன் பின்னர் பெயர் சேர்க்கப்பட்டாலும், துணை பட்டியல் வெளியிட முடியாது. ஏனெனில் அதற்கான நேரம் தற்போது இல்லை என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த்,”இந்த விவகாரத்தை பொருத்தவரையில் பொதுமக்களின் ஜனநாயக உரிமையை மறுக்க முடியாது. எனவே தேர்தல் ஆணையத்தின் வாதங்களை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது. இதில் வரும் 28ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்னர், அந்த ஆய்வுகளின் முடிவுக்கு ஏற்ப துணை பட்டியல்களை தொடர்ந்து வெளியிட வேண்டும்.
ஏனெனில் அது இறுதி பட்டியலின் ஒரு பகுதியாகவே கருதப்படும். இந்த விவகாரத்தில் அரசியலமைப்பின் 142 வது பிரிவின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் முழுமையாக பயன்படுத்துகிறது. அதேப்போன்று எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலத்தை சேர்ந்த நிதிபதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகள், ஊதியம், செலவுகள் ஆகிய அனைத்தையும் தேர்தல் ஆணையம் தான் ஏற்க வேண்டும்.
குறிப்பாக இந்த ஆய்வு பணியை மேற்கொள்ளும் நீதிபதிகளுக்கு மார்ச் 9ம் தேதி வரையில் அனைத்து வித விடுமுறையும் ரத்து செய்யப்படுகிறது. குறிப்பாக தகுதியுள்ள எந்த ஒரு வாக்காளர்களின் பெயரும் விடுபட்டவிடக் கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கிறது.
அதேப்போன்று எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்துள்ள உத்தரவின் படி ஆதார் அட்டையையும் ஒரு ஆவணமாக பெற வேண்டும். இதைத்தொடர்ந்து இதுவரை ஆஜராகாத ஐந்து லட்சம் பேர் மற்றும் தகுதியற்ற 1.63 லட்சம் பேர் குறித்த விவரங்களை அதிகாரிகள் சரிபார்க்கும் பணிகளை உடனடியாக துவங்குவார்கள் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
