கும்பல் வன்முறை வழக்கில் 2018ல் உருவாக்கப்பட்ட பொதுவான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்: உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து

புதுடெல்லி: கும்பல் வன்முறை தொடர்பான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.கடந்த 2018ம் ஆண்டு தெஹ்சீன் பூனாவாலா வழக்கில் கும்பல் வன்முறை மற்றும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் தாக்குதல்களைத் தடுக்க உச்ச நீதிமன்றம் பல்வேறு கடுமையான வழிகாட்டுதல்களை வழங்கியது. மாவட்ட அளவில் இதற்காக அதிகாரிகளை நியமிப்பது மற்றும் துரிதமான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்களாக இருந்தன.

இந்த நிலையில், நேற்று இந்த பழைய வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் சரியாகப் பின்பற்றவில்லை எனத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, பழைய தீர்ப்பில் வழங்கப்பட்ட பொதுவான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்று நீதிபதிகள் அதிரடியாகக் குறிப்பிட்டனர். ‘மாநில அளவில் நடக்கும் கிரிமினல் வழக்குகளை டெல்லியில் இருந்தபடி உச்ச நீதிமன்றம் நுணுக்கமாகக் கையாள்வது இயலாத காரியம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ‘கும்பல் வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குரிய நீதியைப் பெற அந்தந்த மாநிலங்களில் உள்ள உள்ளூர் நீதிமன்றங்கள் மற்றும் உயர் அதிகாரிகளைத் தான் அணுக வேண்டும்’ என்று அறிவுறுத்தினர்.

மேலும் பாரதிய நியாய சன்ஹிதா போன்ற புதிய சட்டங்களில் கும்பல் வன்முறைக்கென பிரத்யேக தண்டனைப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, நீதிமன்ற அவமதிப்பு மனுக்களைத் தள்ளுபடி செய்தனர். அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், ‘கடந்த 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட பொதுவான வழிகாட்டுதல்கள் தற்போது நிர்வகிக்க முடியாத ஒன்றாக உள்ளன’ என்று கூறினார். கும்பல் வன்முறை தொடர்பான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: