பெங்களூரு: காந்தாரா பட விவகாரத்தில் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கின் கோரிக்கையை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. கர்நாடக மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் கோலா மற்றும் பஞ்சுர்லி தெய்வ வழிபாட்டு முறைகள் மிகவும் புனிதமானதாகப் போற்றப்படுகின்றன. இந்த நிலையில், இந்தி திரையுலக நடிகர் ரன்வீர் சிங், காந்தாரா திரைப்படத்தில் வரும் தெய்வத்தைப் போன்ற ஒரு தோற்றத்தில் போஸ் கொடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
இது பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, உத்தர கன்னடா மாவட்டத்தின் குமதா போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ரன்வீர் சிங் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நேற்று அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, ‘இவ்வழக்கில் எந்தவித அவசரமும் இல்லை. சாதாரண நடைமுறை வரிசைப்படி தான் விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்தார். இதன் மூலம் ரன்வீர் சிங்கிற்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
