பெண்களை மோசமாக சிறுமைப்படுத்தி மீண்டும் மீண்டும் சீண்டும் மாஜி: கொந்தளிப்பில் மகளிர்

தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடை காலத்தையொட்டி சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.2,000 சேர்த்து ரூ.5,000 மகளிர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.

இத்திட்டம் குறித்து அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சர்ச்சை கருத்து தெரிவித்தது மகளிர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே நேற்று விழுப்புரம் அருகே கோலியனூரில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.வி.சண்முகம், பெண்கள் இந்த வெயிலில் நிற்கிறீர்களாம், வெயிலில் கருத்து சிறுத்து விட்டீர்களாம், உங்க அழகெல்லாம் போய்விட்டது என 2,000 ரூபாய் வழங்கி இருக்கிறார்கள்.

இந்த பணத்தை வைத்துக்கொண்டு நீ (மகளிர்கள்), உங்க வீட்டுக்காரர் (கணவன்), சக்காளத்தி என எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஊட்டி, கொடைக்கானல் சென்று 10 நாள் குளுகுளுவென இருக்கணுமாம். இப்பணத்தை வைத்து மளிகை கடைக்குகூட செல்ல முடியாது என அரசின் மகளிர் உரிமை தொகை திட்டத்தை நக்கல் அடித்து பேசியுள்ளார். இது அங்கிருந்த மகளிர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சில வாரங்களுக்கு முன்பு அதிமுக பூத் கமிட்டி மீட்டிங்கில், தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து ஆளுக்கொரு பொண்டாட்டியை இலவசமாக கொடுப்பார்கள் என்று சர்ச்சை கருத்தை சி.வி.சண்முகம் கூறியிருந்தார். இதுகுறித்து மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் இதுகுறித்த வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Related Stories: