- நெடுஞ்சாலை 4
- நாகர்கோவில்
- மிலா
- அரல்வைலோங்ஜி தெற்கு மைதானங்கள்
- போதபாண்டி வன ரிசர்வ்
- குமாரி மாவட்டம்
- தகுமலை
ஆரல்வாய்மொழி : காவல்கிணறு -நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் கார் மீது பாய்ந்த மிளா பரிதாபமாக இறந்தது. குமரி மாவட்டம் பூதப்பாண்டி வன சரகத்திற்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி தெற்கு மலைப்பகுதிகளில் மிளா, காட்டுப்பன்றி, குரங்கு போன்ற வனவிலங்குகள் அதிகளவு காணப்படுகிறது. தெற்குமலை அருகே செல்லும் 4 வழி சாலையை வனவிலங்குகள் கடந்து செல்கின்ற போது வாகனங்களில் அடிப்பட்டு பலியாகும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று காலை சுமார் 10.30மணி அளவில் காவல்கிணறு – நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் ஆரல்வாய்மொழிக்கும் தோவாளைக்கும் இடைப்பட்ட பகுதியில் நாகர்கோவில் நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது சுமார் 5 வயது மதிக்கத்தக்க, ஆண் மிளா ஒன்று சாலையை கடக்க துள்ளி பாய்ந்தபோது அந்த வழியாக வந்த கார் மோதியது.இதில் மிளா சம்பவ இடத்தில் பலியானது. காரின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. டிரைவர் காரை விட்டு விட்டு தப்பிவிட்டார்.
இத்தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி வன சரகர் அன்பழகன் உத்தரவின் பேரில் வனகாப்பாளர்கள் பாலசந்திரிகா, முத்துராமலிங்கம் , வன காவலர்கள் பிரபின், புஷ்பராஜ், வேட்டை தடுப்பு காவலர்கள் சிவதணிகைவேலன், தனிஷ், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி பலியான மிளா உடலை மீட்டனர்.
பின்னர் தோவாளை கால்நடை மருத்துவ அதிகாரி மூலம் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விரிவான அறிக்கை பின்னர் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்குமலை அடிவாரத்தின் அருகே 4 வழி சாலை செல்வதால் அடிக்கடி வனவிலங்குகள் சாலையை கடந்து செல்லும். எனவே இவ்வழியாக வருகின்ற வாகனங்கள் மிகவும் கவனமாகவும், வாகனத்தின் வேகத்தை கட்டுப்பாட்டுடனும் ஓட்ட வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
