×

கூந்தன்குளம் சரணாலயத்தில் தண்ணீர் திறப்பால் நூற்றுக்கணக்கான பறவைகள் வரத்து அதிகரிப்பு

தியாகராஜ நகர் : நெல்லை மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து குளம் நிரம்பியுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான பறவைகள் வந்து முகாமிடத் துவங்கியுள்ளன. நெல்லை மாவட்டம், கூந்தன்குளத்தில் அமைந்துள்ள சரணாலயமானது பறவைகளின் சிறந்த வாழ்விடமாகத் திகழ்கிறது.

இங்கு ஆண்டுதோறும் டிசம்பரில் தொடங்கும் பறவைகளின் வசந்தகாலம் ஆகஸ்ட்வரை நீடிப்பது வழக்கம். பறவைக்கு ஏற்ற தட்பவெப்ப சூழல் பிறவிலங்கினங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான இயற்கை சூழல் குளத்தில் மையப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள மரங்கள் என இருப்பதால் பிற விலங்கினங்களின் அச்சுறுத்தல் இன்றி முகாமிடுகின்றன.

அந்தவகையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் கூந்தன்குளத்திற்கு அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்தன. குறிப்பாக பத்துக்கு மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த பறவைகள் முகாமிட்டன.மேலும் கடந்தாண்டு மழைக்கால சீசனில் ஓரளவு மழை பெய்தாலும்கூட கூந்தன்குளம் குளத்தை நிரப்பும் அளவிற்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் கடந்த ஜனவரி முதல் வாரம் முதலே இங்கு தண்ணீர் இருப்பு குறையத்துவங்கியது.

இதனால் இங்குவந்து முகாமிட்டிருந்த பறவைகள் அருகேயுள்ள கழுவூர் குளத்திற்கு இடம்பெயர்ந்து சென்றன. கழுவூர்குளத்தில் ஜனவரி மாதம் 3வது வாரத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பறவைகள் முகாமிட்டிருந்தன. இதையடுத்து கூந்தன்குளத்தை நிரப்பத் தேவையான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பறவைகள் ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனிடையே கழுவூர்குளத்திலும் தண்ணீர் குறையத் துவங்கியதோடு பறவைக் குஞ்சுகள் செத்து மடிந்த சம்பவமும் நடந்தது. இதனால் வேதனைக்கு உள்ளான சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இங்கு உடனடியாக தண்ணீர் திறப்பது அவசியம் என தொடர்ந்து வலியுறுத்தினர். அத்துடன் இதுகுறித்த கோரிக்கை செய்தியும் தினகரனில் வெளியானது.

அதன்பேரில் சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் கூந்தல்குளத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வேகமாகப் பெருக்கெடுத்து வந்த தண்ணீர் குளத்தில் நிரம்பத்துவங்கியது. இதையடுத்து கூந்தன்குளத்தை நோக்கி நூற்றுக்கணக்கான பறவைகள் மீண்டும் திரும்பி வந்து முகாமிடத் துவங்கியுள்ளன.

இவ்வாறு பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதால் கூந்தன்குளம் களை கட்டியுள்ளது. இங்குள்ள மரங்களிடம் குளத்தின் மையத்தில் உள்ள மரங்களும் உள்நாட்டு வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் முகாமிட்டுள்ளன. இதனால் இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் நூற்றுக்கணக்கான மக்களும் நேரில் சென்று பறவைகளை பார்த்து வருகின்றனர்.

Tags : Koonthankulam Sanctuary ,Thiagarajanagar ,Koonthankulam Bird Sanctuary ,Nellai district ,Koonthankulam, Nellai district ,
× RELATED அந்தியூர் வாரச்சந்தையில் 2 நாட்களில் ரூ.1.20 கோடிக்கு கால்நடைகள் விற்பனை