×

ஆத்திக்காட்டுவிளை ஊராட்சியில் சாலையோரம் எரித்த குப்பைகளால் தீயில் கருகிய மரங்கள்

ஈத்தாமொழி: ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்திக்காட்டுவிளை ஊராட்சியில் புதூர்- மேல கிருஷ்ணன்புதூர் பிரதான சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வீட்டு குப்பைகள் உள்ளிட்டவற்றை கொட்டி அடிக்கடி தீ வைக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் சாலையோரத்தில் இருந்த வேம்பு உள்ளிட்ட மரங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.

பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் எரிப்பதால் வெளியாகும் நச்சு புகை காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்போர் பெரும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நீண்ட நாட்களாக இந்த நிலை தொடர்ந்தும், ஊராட்சி நிர்வாகம் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே குப்பை கொட்டி தீ வைப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமடைந்த மரங்களை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Athikattuvilai Panchayat ,Rajakamangalam Panchayat Union ,Puthur-Mela Krishnanputhur ,
× RELATED அந்தியூர் வாரச்சந்தையில் 2 நாட்களில் ரூ.1.20 கோடிக்கு கால்நடைகள் விற்பனை