பாங்காக்: ஆசிய கோப்பை மகளிர் ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா ஏ மகளிர் அணி, 46 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் ஏ மகளிர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது. ஆசிய கோப்பை மகளிர் ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டிகள் பாங்காக் நகரில் நடந்து வந்தன. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா ஏ மகளிர்-வங்கதேசம் ஏ மகளிர் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீராங்கனைகள் நந்தினி காஷ்யப் 8, தினேஷ் விருந்தா 19 ரன்களில் வீழ்ந்தனர். பின் வந்தோரில் தேஜல் ஹஸப்னிஸ் அவுட்டாகாமல் 34 பந்துகளில் 51, கேப்டன் ராதா யாதவ் 30 பந்துகளில் 36 ரன்கள் விளாசினர்.
20 ஓவரில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்தது. பின்னர், 135 ரன் இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. அதன் துவக்க வீராங்கனைகள் இஷ்மா தாஞ்சிம் 3, ஷமிமா சுல்தானா 20 ரன்னில் அவுட்டாகினர். அடுத்து வந்த வீராங்கனைகளில் ஸர்மின் சுல்தானா 18, கேப்டன் ஃபாஹிமா காடுன் 14 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 19.1 ஓவரில் அந்த அணி 88 ரன்களில் சுருண்டது. அதனால், 46 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
