அகமதாபாத்: 10வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடரில் லீக் சுற்று முடிந்து சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா- ரன்னரான தென்ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் லீக் சுற்றில் 4 போட்டியிலும் வென்ற நிலையில் வெற்றியை தொடரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த போட்டி குறித்து தென்ஆப்ரிக்க அணியின் தொடக்க வீரரான விக்கெட் கீப்பர் டிகாக் கூறியதாவது: உண்மையைச் சொல்லப்போனால், அந்த ஆட்டத்திற்குப் பிறகு (2024 உலக கோப்பை பைனல்) நாங்கள் அதை மறந்துவிட்டோம். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், அதைப் பற்றி பேச யாரும் விரும்பவில்லை. நாங்கள் வீட்டிற்குச் சென்று அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து எங்கள் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தினோம். அதைப் பற்றி நாங்கள் ஒருபோதும் பேசியதில்லை, என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், உலகக் கோப்பையின் இயல்பே யாருக்கும் சாதகத்தன்மை கிடையாது. எந்த நேரத்திலும், யாரும் ஒரு ஆட்டத்தில் எதிர்பாராதவிதமாக வெல்லலாம். குறிப்பாக டி20 உலகக் கோப்பைகள் மிகவும் நிலையற்ற விளையாட்டு. இரண்டிலிருந்து மூன்று ஓவர்களில் ஒரு தனிநபரின் ஆட்டத்தால் போட்டி திசைமாறலாம். கடந்த 2 மாதங்களாக நாங்கள் ஒருவரையொருவர் (இந்தியா-தெ.ஆ) பலமுறை எதிர்கொண்டுள்ளோம்.
அணிகள் பெரிய அளவில் மாறவில்லை. களத்தில் அழுத்தம் நிலவும் தருணங்களை யார் சிறப்பாகக் கையாண்டு, தங்கள் வசம் ஆக்குகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்’’ என்றார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு பிரேக் எடுத்துவிட்டு வந்தது புத்துணர்ச்சியாக இருப்பதாக கூறினார்.இந்திய அணியில் இடதுகை பேட்டர்கள் அதிகம் இருப்பதால், மற்ற அணிகளை போல் ஆப் ஸ்பின்னருடன் தெ.ஆ. பவுலிங்கை தொடங்குமா என்ற கேள்விக்கு எனக்கு எதுவும் தெரியாது என டிகாக் கூறினார்.
அணியில் எந்த மாற்றமும் தேவையில்லை;
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி, அபிஷேக் சர்மா ஹாட்ரிக் டக் அவுட் குறித்து கூறியிருப்பதாவது: அவர் 3 போட்டியிலும் டக்அவுட் ஆனதை நேர்மறையாகவே பார்க்கிறேன். போட்டியின் முக்கிய காலகட்டங்களுக்காக தனது சிறந்த ஆட்டத்தை அவர் சேமித்து வைத்துள்ளார். அவர் ரன் எடுக்காதது குறித்து எதிரணிகள் சற்று கவலைப்படுவார்கள். ஒவ்வொரு போட்டியிலும் ஒருவர் சிறப்பாகச் செயல்பட்டது இந்தியாவிற்கு ஒரு நேர்மறையான விஷயம். இஷான் கிஷன், சில சமயங்களில் சூர்யகுமார் யாதவ் முதல் போட்டியில். திலக் வர்மா தனது பங்கை சிறப்பாகவே ஆடியுள்ளனர். கடைசி லீக் போட்டியான நெதர்லாந்துக்கு எதிராக விளையாடிய அணியில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது’’ என்றார்.
