×

சென்னையில் உள்ள 200 பூங்காக்களில் ரூ.20 கோடியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு: மழைநீர் வடிகால் துறை தகவல்

 

சென்னை: சென்னையில் மழைக்காலங்களில் பெய்யும் அதிக அளவிலான மழைநீரைச் சேமிக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், பொது இடங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரின் தரத்தை மேம்படுத்தவும், மாநகராட்சி இந்த ஆண்டு பூங்காக்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. முதல்கட்டமாக ரூ.20 கோடியில் இந்திட்டம் செயல்படுத்தவுள்ளது. ஒரு பூங்காவிற்கு ரூ.10 லட்சம் செலவில் 200 பூங்காக்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவப்படவுள்ளது.

இது தொடர்பாக மழைநீர் வடிகால் துறையின் பொறியாளர் முருகன் கூறியதாவது; மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் 10-12 அடி குழிகளில் வளைய கிணறு அமைப்புடன் அமைக்கப்படும். நீர் ஊடுருவல் அதிகமாக இருப்பதால் இவை பூங்காக்களுக்கு ஏற்றவை. சாய்வான இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு உருவாக்கப்படும். மேலும், இலைகள் மற்றும் சேறு அவற்றில் நுழைவதைத் தடுக்கும் வகையிலான வடிகட்டி வலை வைக்கப்படும். ஒவ்வொரு வாரமும் வலை சுத்தம் செய்யப்படும். வளைய கிணறுகளில் கற்கள், சேறு மற்றும் குப்பைகள் வருடத்திற்கு ஒரு முறை அகற்றப்படும். தேர்தல்களுக்குப் பிறகு டெண்டர்கள் விடப்பட்டு, ஜூன் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களில் மொத்தம் ரூ.25 கோடி செலவில் மழைநீர் சேகரிப்பு மற்றும் ஸ்பான்ச் அமைப்புகள் அமைக்கப்படும். மண்டலம் 1ல் உள்ள ஜோதி நகரில் உள்ள விளையாட்டு மைதானங்கள், மண்டலம் 2ல் உள்ள பர்மா நகர் மற்றும் மணலி புது நகரில் உள்ள எம்.ஆர்.பி நகர், மண்டலம் 2ல் உள்ள வழுதலமேடு சின்னசேக்காடு மற்றும் மண்டலம் 13ல் உள்ள காந்தி நகர், அடையாறு ஆகியவை இந்த முயற்சியால் பயனடையும். இது மழைநீரை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவும் மற்றும் திறந்தவெளிகளில் மேற்பரப்பு ஓட்டத்தை குறைக்க உதவும். தொடர்ச்சியாக மழைநீர் சேகரிப்பு குழிகள் பராமரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai ,
× RELATED மாநகராட்சி பகுதிகளில்...