மதுரையில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல் பங்கேற்பு: கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்

மதுரை: மதுரைக்கு இன்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.1805.28 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார். மாலையில் உத்தங்குடியில் நடக்கும் தென்மண்டல திமுக பாக முகவர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடக்கும் திமுக பாக முகவர்கள் மாநாடு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10.30 மணிக்கு மதுரை விமானநிலையம் வருகிறார். விமானநிலையத்தில் முதல்வருக்கு அரசு அதிகாரிகள் மற்றும் கட்சியினர் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, அங்கிருந்து வேன் மூலம் செல்லும் முதல்வர் காலை 11 மணிக்கு மதுரை வடபழஞ்சி எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் தனியார் மென்பொருள் நிறுவத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விரிவுப்படுத்தப்பட்ட புதிய உலகளாவிய சிறப்புப் பொறியியல் மைய கட்டிடம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், பகல் 12.15 மணிக்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில் மதுரை தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையில் ரூ.213.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பகல் 12.30 மணிக்கு மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து பகல் ஒரு மணிக்கு மதுரை கே.கே.நகரில், ரூ.50 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட வண்டியூர் கண்மாய் பூங்காவை திறந்து வைக்கிறார். இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் இருந்தவாறு சிவகங்கையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

மேலும், ரூ.1536.31 கோடி செலவிலான 867 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தையும், ரூ.1.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் மற்றும் மன்ற கூட்ட அரங்கத்தையும், புது ஜெயில் ரோட்டில் ரூ.3.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அங்கூரான் நவீன அறிவியல் மையத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பகல் 1.30 மணிக்கு அழகர்கோவில் ரோட்டிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். ஓய்வுக்கு பிறகு, மாலை 5 மணிக்கு மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் நடக்கும் தென்மண்டல திமுக பாக முகவர்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் தென்மண்டலத்திற்கு உட்பட்ட 20 மாவட்டங்களிலுள்ள 58 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 1.89 லட்சம் திமுக பாக முகவர்கள், வாக்குசாவடி குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாடு முடிந்ததும், இரவு 7 மணிக்கு மதுரை காந்தி மியூசியத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மறவோம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வீரபாண்டியன், முஸ்லீம் லீக் தலைவர் காதர் ெமாகிதீன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தவாக தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர். மதுரையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு இரவு 7.30 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

Related Stories: