சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், சென்னை, ராயப்பேட்டை தலைமை கழகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதில் எம்பி, எம்எல்ஏக்கள், தலைமைக்கழக மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிசார்ந்த செயலாளர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதேபோல், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் ஆங்காங்கே கழக கொடி கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும்; கொடி கம்பங்கள் இல்லாத இடங்களில் புதியவற்றை அமைத்து கொடியினை ஏற்றி வைத்தும்; தத்தமது பகுதிகளில் ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவ சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.
மேலும் கண் தானம், ரத்த தானம், மருத்துவ முகாம், கவிதை, கட்டுரை, விளையாட்டு போட்டிகளை நடத்துதல், மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், இலவச திருமணங்களை நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கிடுமாறு கேட்டு கொள்கிறோம். மேலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஜெயலலிதாவின் உருவ சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு மற்றும் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பித்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
