×

நெல்லையில் 9வது பொருநை புத்தகத் திருவிழா மீனவர்களின் வாழ்வாதார பாதிப்புகள் வெளியே தெரிவதில்லை

*எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் பேச்சு

நெல்லை : மீனவர்களின் வாழ்வாதார பாதிப்புகள் வெளியே தெரிவதில்லை என நெல்லை புத்தக திருவிழாவில் எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் பேசினார்.நெல்லையின் பண்பாட்டு அழகியலையும், வரலாற்று பெருமைகளையும் பறைசாற்றும் விதமாக 9வது பொருநை புத்தகத் திருவிழா நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் கடந்த 10ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

மொத்தம் 115 முன்னணி பதிப்பகங்கள் பங்கேற்றுள்ள இந்த புத்தகத் திருவிழாவில் கலை, இலக்கியம், போட்டித்தேர்வுகள், ஆன்மீகம், வரலாறு என லட்சக்கணக்கான புத்தகங்கள் அரங்கில் இடம் பெற்றுள்ளன. புத்தகங்கள் மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அறிவியல் நிகழ்வுகள், பழங்காலப்பொருட்கள், ஓவியம், இயற்கை விளைபொருட்கள், உயர்கல்வி வழிகாட்டுதல் என பல்வேறு கண்காட்சிகள் புத்தக திருவிழா வளாகத்துக்குள்ளேயே தனித்தனி அரங்குகளில் நடைபெற்று வருகின்றன.

புத்தக கண்காட்சியில் நேற்று மாலை 6 மணிக்கு ‘நீல பொருளாதாரம்’ என்னும் தலைப்பில் சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி. குரூஸ் பேசியதாவது, ‘‘மீனவர்கள் முதலீடுகள் இன்றி, கடலில் வேட்டையாடி பணம் சேர்ப்பது போன்ற ஒரு புரிதல் உள்ளது. ஆனால் அது உண்மையல்ல. கடலிலும் அளவற்ற உழைப்பும், அதிக முதலீடுகளும் காணப்படுகின்றன. நெய்தல் நிலத்தில் அம்பா வகைப்பாடல்கள் இலக்கிய வடிவம் பெறவில்லை.

இப்பாடல்களை மூதாதையர்கள் தங்கள் குழந்தைக்கும், அடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தி செல்கின்றனர். இப்பாடல்களில் முன்னோர்களின் உழைப்பும், மீனவர்களின் கஷ்டங்களும் விரவி கிடக்கின்றன. தூத்துக்குடியில் இருந்து வங்க கடல் நோக்கி தோணியை கடலில் இயக்கியவர்கள் அம்பா பாடல்களை அதிகம் பாடி வருகின்றனர்.

தங்கள் அனுபவங்களையும், வெற்றி, தோல்விகளையும் பாடல்கள் மூலம் குழந்தைகளுக்கு சொல்லி சென்றுள்ளனர். மீனவர்கள் உயிரிழந்தால் மட்டுமே செய்தியாக வருகிறது. மீனவர்களின் வாழ்வாதார பாதிப்புகள் வெளியே தெரிவதில்லை.

வாழ்நாள் உழைப்பில் அவர்கள் சேமித்து வாங்கும் வலைகள், படகுகள் சேதமாகும்போது பெரியதாக வெளி கொணரப்படுவதில்லை. இவற்றை அம்பா பாடல்கள் மூலமே அறிகிறோம். எனவே அம்பா பாடல்களை இலக்கியத்தில் சேர்ப்பதோடு, அவற்றை பாடப்புத்தகத்திலும் இடம்பெற செய்ய வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து ‘இலக்கியமும் உள்ளார்ந்த வாழ்வும்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் வேல்முருகன் இளங்கோ, வாசிப்போடு வாழ்வோம் என்னும் தலைப்பில் எழுத்தாளர் எம்.எம்.தீன், கவிதையும் நானும் என்னும் தலைப்பில் கவிஞர் மதார் ஆகியோர் பேசினர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு முத்துக்குமரன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது.

ஓவிய பயிற்சியில் அசத்திய மாற்றுத்திறன் சிறுவர்கள்

நெல்லை மாநகரில் 9வது பொருநை புத்தக திருவிழா நடக்கிறது. இங்கு நூல்கள் வாசிப்பை தாண்டி தினமும் பல கலை நிகழ்வுகள் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக மாற்று திறன் மாணவ, மாணவிகளுக்கான ஓவிய பயிற்சி பட்டறை நேற்று நடந்தது.

பள்ளி கல்வித்துறை இந்த சிறப்பு பயிற்சி பட்டறையை நடத்தியது. தமிழ் வனம், மூங்கில் வனம் ஆகிய அமைப்புகளும் இணைந்து செயல்பட்டன. குரு வனம் அமைப்பும் இந்த நிகழ்வில் பங்கேற்றது.

இதில் பார்வையற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். காது கேளாத சிறுவர்களும் பயிற்சியை பெற்றனர். நுண்கலை அறிஞர் ஓவியர் சந்துரு தலைமை வகித்து மாணவர்களுக்கு ஓவியம் வரையவும், சிலை வடிவமைப்பு செய்வது குறித்தும் பயிற்சி அளித்தார்.

நுண்கலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி தினமும் நடக்கிறது. சிறுவர்கள் உருவாக்கிய கலை படைப்புகளை கண்காட்சியாக வைத்தனர்.

இந்த வகுப்பில் ஓவிய ஆசிரியர்கள் மிக எளிமையாக ஓவியம் வரைய சிறுவர்களுக்கு கற்று கொடுத்தனர். இதில் பல சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்கள் பென்சிலால் அருமையான ஓவியங்களை தீட்டி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதனை புத்தக கண்காட்சிக்கு வந்தவர்கள் கண்டு ரசித்தனர். தாசில்தார் வில்லுடையார் வாழ்த்தி பேசினார். ஓவியர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Tags : 9th Porunai Book Festival ,Nellai ,Joe D. Cruz ,Nellai Book Festival ,Nellai Corporation ,
× RELATED தமிழ்நாடு-கேரள எல்லை பகுதியில்...