உடுமலை : கோடை நெருங்கிவரும் நிலையில் உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் தீத்தடுப்பு கோடுகள் இன்னும் அமைக்கப்படாமல் உள்ளன.ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, உடுமலை, பொள்ளாச்சி ஆகிய 6 வனச்சரகங்கள் உள்ளன. பொள்ளாச்சி கோட்டத்தில் 4 வனச்சரகங்களும், திருப்பூர் கோட்டத்தில் உடுமலை, அமராவதி வனச்சரகங்களும் உள்ளன.
உடுமலை, அமராவதி வனச்சரகம் மட்டும் 220 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளும். அரியவகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.
மேலும், சந்தனம், தேக்கு உள்ளிட்ட ஏராளமான மரங்களும் உள்ளன.கோடை காலத்தில் கடும் வெயில் காரணமாக, வனத்தில் உள்ள புற்கள், செடிகள் காய்ந்து காணப்படும். கடந்த 2 மாதமாக நிலவிய கடும் பனியால் கருகிய செடிகள், வரும் கோடை காலத்தில் வெப்பத்தினால் தீப்பற்றிக்கொள்ளும். மேலும் சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் வீசிச் செல்லும் சிகரெட் துண்டுகளாலும் தீப்பற்றிக்கொள்ளும்.
எனவே, தீ பரவா வண்ணம் சாலையோரம் காய்ந்த செடிகளை வெட்டி அப்புறப்படுத்துவதும், வனத்தில் ஆங்காங்கே செடிகளை குறிப்பிட்ட தூரத்துக்கு தீ வைத்து எரிப்பதும் வழக்கம். இவ்வாறு தீத்தடுப்பு கோடுகள் அமைப்பதால் தீ பரவாமல் தடுக்கப்படுகிறது.தற்போது, பிப்ரவரி மத்தியில் வெயில் கொளுத்த துவங்கிவிட்டது. கோடை ஆரம்பித்ததும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். வழக்கமாக பிப்ரவரி துவக்கத்திலேயே தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் துவங்கும். ஆனால் இதுவரை வனத்துறை சார்பில் இந்த பணிகள் துவங்கவில்லை.
சின்னாறு பகுதியில் தீத்தடுப்பு முகாம் உள்ளது. இங்கு வனவர், வன காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர் ஆகியோர் கொண்ட குழுவினர் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பார்கள். இதற்காக நிரந்தர கட்டிடம் அங்கு உள்ளது. மேலும், வனத்துறையினர் ரோந்து சென்றும் கண்காணிப்பது வழக்கம். ஆனால் தீத்தடுப்பு பணிகளுக்கான அறிகுறிகள் தெரியவில்லை என வன ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மூணாறு ரோட்டில் ஒன்பதாறு செக்போஸ்டில் இருந்து சின்னாறு செக்போஸ்ட் வரை சுமார் 13.4 கிமீ தூரத்துக்கு சாலையின் இருபுறமும் செடிகள் காய்ந்து கிடக்கின்றன. சுற்றுலா பயணிகள் வீசிச்செல்லும் பொருட்களால் இங்கு தீப்பற்றிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.சமீபத்தில் உடுமலை வனச்சரகம் பொக்காமலையில் தீப்பிடித்தது. கிராமவாசிகள் எதிர் தீ வைத்து தீயை கட்டுப்படுத்தினர்.
வன ஆர்வலர்கள் கூறுகையில், “தீத்தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. ஆனால் எந்த பணிகளும் நடைபெற்றதாக தெரியவில்லை. தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பாக வனத்துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’‘ என்றனர்.
