×

‘சட்டவிரோத போட் கிளப்புகள்’ மக்களின் உயிரோடு விளையாடும் அவலம்

*அடிக்கடி கவிழும் படகுகள்-கண்டுகொள்ளாத அரசு துறைகள்

புதுச்சேரி : புதுச்சேரியில் செயல்பட்டு வரும் சட்டவிரோத போட் கிளப்புகள் மக்கள் உயிரோடு விளையாடி வருகின்றன. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரியில் பாண்டி மெரினா, தேங்காய்திட்டு, முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் இருந்து அனுமதியின்றி பல்வேறு படகு சவாரி கிளப்புகள் இயங்கி வருகிறது. மீன்பிடி படகுகளில் சிறிது மாற்றம் செய்து உப்பங்கழிகளிலும், முகத்துவாரத்திலும் படகு சவாரி என்ற பெயரில் 100க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகிறது.

இது சட்டவிரோதமானது என்றாலும், வெளிமாநில சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து இந்த போட் கிளப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்தகைய படகுகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்வதும், பயணிகள் காப்பற்றப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை பெங்களூரை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து, இதில் சோனியா என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 2 பேருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தை தொடர்ந்து மீன்பிடி படகுகளின் பாதுகாப்பு அம்சம் மற்றும் இயந்திர படகு ஓட்டுநர்களின் திறன்கள் குறித்த அச்சங்கள் பரவலாக எழுந்துள்ளது. சுற்றுலா படகுகளின் ஓட்டுநர்கள் கோவாவில் உள்ள தேசிய நீர் விளையாட்டு நிறுவனத்திடமிருந்து (NIWS) சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்த சான்றிதழை புதுப்பிக்க வேண்டும். இருப்பினும், அனைத்து இயந்திர படகு ஓட்டுநர்களும் அத்தகைய சான்றிதழை வைத்திருக்கவில்லை.

இதுகுறித்து பயணிகளிடம் கேட்டபோது, புதுச்சேரியில் தான்தோன்றித்தனமாக சுற்றுலாப்படகுகள் இயக்கப்படுவது குறித்து பெரும் கவலை எழுந்துள்ளது. வெளியூரில் இருந்து வரும் எங்களுக்கு இது தொடர்பான எவ்வித தகவலும் தெரிவதில்லை.

ஏதேனும் விபத்து ஏற்பட்டால், காப்பீடு உள்ளதா? என தெரியவில்லை. முறைப்படியான டிக்கெட் ஏதும் இல்லை. எந்த போட் கிளப் அரசின் அனுமதி பெற்றது? விதிமுறைகளை மீறி யார்? படகு இயக்குகின்றனர் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது.

எனவே அரசுதான் இதன் மீது தீவிரம் காட்ட வேண்டும். உப்பங்கழிகளில் படகு இயக்கப்படுவதில் பிரச்னை இல்லை. ஆனால் முகத்துவாரத்தில் கடல் சந்திக்கும் இடத்தில் சிறிய படகு தத்தளிப்பதை, பலர் த்ரில்லிங்காக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. எனவே அரசு இதன் மீது தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்

இதுகுறித்து சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது: புதுச்சேரியில் நீர் விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு வழிகாட்டுதல்கள் 2018 பின்பற்றி சுற்றுலாத்துறை தனிநபர்கள் (பெரும்பாலும் மீனவர்கள்) கடல் பயணத்தை இயக்குவதற்கும், புதுச்சேரியின் உப்பங்கழிகளில் படகு சவாரி செய்வதற்கும் அனுமதிகளை வழங்கி வருகிறது. படகு இயக்குபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்னமும் வகுக்கப்படவில்லை.

சுற்றுலா, மீன்வளம், துறைமுகம் ஆகிய துறைகள் படகு குழாம்களை ஒவ்வொரு காலாண்டுக்கு பிறகும் சவாரிக்கு பயன்படுத்தப்படும் படகுகளை ஆய்வு செய்வது கட்டாயமாகும். நீர்விளையாட்டுக்கான திறன்கள், பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட படகுகளையும், முறையாக பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் மட்டுமே இத்தகைய தொழிலில் ஈடுபட வேண்டும்.

ஆனால் இவை எதுவும் இங்கே பின்பற்றப்படவில்லை. உரிய வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாமல், புற்றீசல் போல போட் கிளப்புகள் ஆரம்பிப்பதும், மக்களின் உயிரோடு விளையாடுவதும் தொடர் கதையாக உள்ளது. எனவே சட்டவிரோதமாக இயங்கும் போட் கிளப்புகள் அனைத்தையும் முற்றிலும் தடை செய்ய வேண்டும். அரசு நெறிமுறைப்படுத்திய பிறகு சவாரிக்கு அனுமதிக்க வேண்டும், என்றனர்.

அரசியல் அழுத்தம்

இதுகுறித்து கடலோர காவல்படையிடம் விசாரித்தபோது: மீன்பிடி படகுகளில் சுற்றுலாப்பயணிகளை அழைத்து செல்ல அனுமதியில்லை. இதனையும் மீறி படகு சவாரி சட்டவிரோதமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள வருமாறும், மீன்வளம், சுற்றுலா, வனம், துறைமுகம் உள்ளிட்ட துறைகளுக்கு பலமுறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. எந்த நடவடிக்கையும் இல்லை. அரசுதான் இதன் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய சூழல் நிலவுகிறது. ஏனெனில் இதன் பின்னணியில் அரசியல் அழுத்தமும் இருக்கிறது, என்றனர்.

Tags : Puducherry ,Pondy Marina ,Coconut Hill ,Murungapakkam Craft… ,
× RELATED தமிழ்நாடு-கேரள எல்லை பகுதியில்...